அண்ணாமலை தொடர் உண்ணாவிரதம்.. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடத்தப்போவதாக அறிவிப்பு.. என்ன காரணம்?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தனியாக வசித்து வந்த தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். இந்நிலையில் இன்னும் 2 வாரங்களில் கொலையாளிகளை கைது செய்யவில்லை என்றால் வரும் 20ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பாக்கியம். இதில் ராமசாமிக்கு 75 வயதாகும். மனைவி பாக்கியம்மாளுக்கு 65 வயது ஆனது. இவர்கள் 2 பேரும் மேகரையான் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தான் 4 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ராமசாமியின் உடல் வீட்டுக்கு உள்ளேயும், பாக்கியம்மாள் உடல் வீட்டுக்கு வெளியேவும் கிடந்தது.
போலீசாரின் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பதியை கொலை செய்த நபர்கள் 12 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கொலை நடந்து 4 நாட்களை கடந்தாலும் கூட இன்னும் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.
இந்நிலையில் தான் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கொலை செய்யப்பட்ட ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தான் தற்போது திடீரென தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை, ‛‛ஈரோடு சிவகிரியில் தனியாக வசித்த தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இத்தகைய படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட வேட்டை நாய்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனையை உலகமே திரும்பி பார்க்க வேண்டும். அதற்கு அரசுக்கும், போலீசாருக்கும் தைரியம் இல்லை. இன்னும் 2 வாரங்களில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வரும் 20ம் தேதி முதல் சிவகிரியில் என் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதை கலைக்க முதல்வர் தான் வர வேண்டும்'' என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக ராமசாமி - பாக்கியம்மாள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய போட்டோக்களை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், ‛‛இன்றைய தினம், சமீபத்தில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே அடையளம் தெரியாத நபர்களால் படுகொலை செ்யப்பட்ட ஆர் ராமசாமி கவுண்டர் மற்றும் ஆர் பாக்கியம்மாள் ஆகியோரின் இல்லத்துக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
குற்றம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறித்து, அவர்கள்தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு உறுதுணையாக தமிழ்நாடு பாஜக தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை தெரிவித்து கொண்டோம். தனியாக வசித்து வருபவர்களை குறிவைத்து, தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுக்க திமுக அரசை தொடர்ந்து வலியறுத்தி வருகிறோம். ஆனால் திமுக அரசு முற்றிலும் செயலற்றுப் போய் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications