மனக் கசப்பு.. எனக்கே சொல்லல.. எல்லாருக்கும் இந்த நிலை தான்.. ஈபிஎஸ் அணியில் இணைந்த நிர்வாகி குமுறல்!
ஓபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஈபிஎஸ் அணியில் இணைந்த முருகானந்தம்.
ஈரோடு : அதிமுக தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் உள்ளதால் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகியுள்ளோம் என ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர்.
ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் தங்கராஜ், உள்ளிட்டோர் ஓபிஎஸ் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர்.

மனக் கசப்பு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முருகானந்தம், "நான் மாவட்ட செயலாளர். எனது தொகுதி வேட்பாளரை என்னைக் கேட்காமலேயே அறிவித்தனர். அதுகுறித்து தலைமையிடம் கேட்டேன். எந்த பதிலும் வரவில்லை. அதனால் மனக் கசப்பு ஏற்பட்டது. எனவே, இரட்டை இலை எங்கிருக்கிறதோ அங்கு செல்லலாம் என முடிவு செய்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் மொத்தமாக இணைந்துள்ளோம். ஓபிஎஸ் எந்த தகவலையும் நிர்வாகிகளுக்குச் சொல்வதில்லை. அவரிடம் போய்ச் சேர்ந்த எல்லோருக்கும் எனக்கு ஏற்பட்ட நிலைமைதான்.

ஈபிஎஸ் அணியில் இணைவார்கள்
ஓபிஎஸ் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை. எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ளார். அவர் தான் இனி அதிமுகவை வழிநடத்தப்போகிறார். ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளர்களாக இருக்கும் பலரும் அதிருப்தியாக இருக்கிறார்கள். என்னிடமும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஈரோட்டில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் விரைவில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வருவார்கள். தற்போது விலகிய 106 நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளனர்.

எனக்கே அப்போதான் தெரியும்
வேட்பாளரை அறிவிக்கும் நாள் அன்று 5 மணிக்கு தான் மாவட்ட செயலாளரான எனக்கே தகவல் கொடுக்கிறார்கள். ஒரு இடத்தைச் சொல்லி அங்கு எங்களை வரச் சொன்னார்கள். நாங்கள் போன பிறகுதான் தெரிந்தது. வேட்பாளரை காரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள். வேட்பாளர் யார் என்றே அப்போதுதான் தெரியும். நான் 20 வருடங்களாக கட்சியில் இருக்கிறேன். கட்சிக்கு தொடர்பே இல்லாதவரை வேட்பாளராக அறிவித்தனர்.

தடுமாறுகிறார் ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது. ஓபிஎஸ் உடன் இருக்கும் நபர்களால் தான் ஓபிஎஸ்ஸுக்கு பாதிப்பு வரும். ஓபிஎஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார். ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்த முடியாதவர் கட்சியை எப்படி நடத்துவார்? ஓபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் கூடிய விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று வந்து விடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் அறிவிப்பால் மோதல்
ஈரோடு மாநகர மாணவரணி அதிமுக பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. எனவே மாவட்ட செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனால் அதிருப்தி அடைந்த முருகானந்தம், ஓபிஎஸ் அணியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார்.












Click it and Unblock the Notifications