ஈரோட்டில் நாம் தமிழர் தொண்டரின் செல்போனை உடைத்த போலீஸ்? பரபரத்துப்போன பிரசாரம்.. என்னாச்சு?
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு அனுமதியின்றி பிரசாரம் செய்யக்கூடாது எனக்கூறியுள்ளனர். இந்த வேளையில் நாம் தமிழர் நிர்வாகியின் செல்போனை போலீஸ் அதிகாரி பிடுங்கி உடைத்ததாக குற்றம்சாட்டு கட்சியினர் அனைவரும் இணைந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வர உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு மேல் தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி பிரசாரம்
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து கட்சியினரும் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். வேட்பாளர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்தநிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டா்கள் ஈரோடு சம்பத்நகர், பிரப்ரோடு, காவிரி ரோடு உள்ளிட்ட இடங்களில் கட்சி கொடி, சின்னம், துண்டு பிரசுரங்களுடன் நின்றனர்.

செல்போன் உடைப்பு?
அப்போது சம்பத் நகர் பகுதியில் அனுமதியின்றி நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் வீடியோ பதிவு செய்ய முயன்றார். இதையடுத்து போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது செல்போனை தட்டிவிட்டுள்ளார். இதில் செல்போன் கீழே விழுந்து உடைந்ததாக கூறப்படுகிறது.

கடும் வாக்குவாதம்
இதையடுத்து கட்சியினர் ஒன்று திரண்டு போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். மேலும் அனுமதியின்றி பிரசாரம் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கடுமையாக எச்சரித்ததால் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீஸ் நிலையத்துக்கு..
முன்னதாக, ஈரோடு ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக கூறி போலீசார் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் நாம் தமிழர் கட்சியினரை கலைந்து செல்ல கூறினர். அவர்கள் மறுத்த நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 8 பேரை போலீசார் வேனில் ஏற்றி சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். முன்னதாக பிரசாரம் தொடர்பாக 2 முறை திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications