வருகிறது 4 "ஆசிட் டெஸ்ட்".. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பாஜக "அந்த" முடிவை எடுக்குதா? ஆனா எடப்பாடி?
ஈரோடு: ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தல் கூட்டணி நாடாளுமன்றத்திற்கான டீசராக பார்க்கப்படுகிறது.
வாரிசு.. துணிவு இரண்டு படங்களின் டிரெய்லர்களும் வெளிவந்து கவனம் பெற்றுள்ளன. இரண்டில் எது பெஸ்ட் என்று கேட்டு இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் மாறி மாறி மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த டிரெய்லர்களுக்கு இடையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கான இன்னொரு டிரெய்லர் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது, அதுதான் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கும்.. அதிமுகவிற்கும்.. கொங்கில் தான் பெரிய ஆள் என்பதை காட்டுவதற்காக பாஜகவிற்கு மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார் உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.

மரணம்
இவரின் மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகி உள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டதாக இன்னும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த அறிவிப்பு வந்த தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடக்கும். தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சாஹுவும் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதை உறுதி செய்துள்ளார். காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தல் நடக்கும் என்று அறிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடுமா அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்வரும் 4 விஷயங்கள் இதில் நடக்க வாய்ப்பு உள்ளது. 1. அதிமுகவுடன் பாஜகவிற்கு நிறைய உரசல் உள்ளது. பாஜகவை கழற்றிவிடும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் கூட செய்திகள் வருகின்றன. அதோடு கொங்கு மண்டலத்தில் நாங்கள்தான் பெரிய கட்சி என்று நிரூபிக்க பாஜக முயன்று வருகிறது. இதனால் பாஜக தன்னுடைய பலத்தை சோதிக்க, லோக்சபா தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தேர்தலில் தனித்து நிற்கலாம்.

பாஜக நிலைப்பாடு
2வது விஷயம்.. அதிமுக கூட்டணியில் நிற்பது. ஆனால் அதிமுக கூட்டணியில் நின்றாலும், அதிமுக அந்த இடத்தில் பாஜக வேட்பளாரை நிறுத்த அனுமதிக்க வேண்டும். வேட்பாளரை நிறுத்தாமல், பாஜக வெறுமனே அதிமுக வேட்பாளருக்கு சப்போர்ட் செய்யலாம். 3வது விஷயம் 3வது கூட்டணியை பாஜக அமைப்பது. அமமுக, பாமக கட்சிகள் சேர்ந்து 3வது கூட்டணி அமைத்து அவர்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது. 4வதாக திமுகதான் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு அதன் மூலம் தேர்தலை புறக்கணிப்பது ஆகிய 4 விஷயங்களில் ஏதாவது ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த நான்கும் கிட்டத்தட்ட பாஜகவிற்கு ஆசிட் டெஸ்ட் போல இருக்கும்.

அதிமுக கூட்டணி
பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கில் என்ன நடக்கிறது என்பதை பொருத்தும் பாஜகவின் நிலைப்பாடு மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவானவர். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில் பாஜக கூட்டணி உறுதியாகும். ஆனால் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் கொஞ்சம் முரண்டு பிடிப்பார். அதோடு கூட்டணி ரெடி, ஆனால் பாஜக வேட்பாளர் நிற்க முடியாது. அதிமுக வேட்பாளர்தான் நிற்பார் என்று எடப்பாடி முரண்டு பிடிக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்டிக்கொண்டு இருக்கிறது.

கூட்டணி என்ன நடக்கும்?
தங்களின் வாக்கு சதவிகிதம் 10 சதவிகிதம் உயர்ந்துவிட்டதாக பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு இன்னொரு பக்கம் எடப்பாடி பாஜகவை தொடர்ந்து சீண்டி வருகிறார். சமீபத்தில் சிவி சண்முகம் கூட பாஜக + திமுக கூட்டணி அமைக்கப்பட உள்ளதாக கூறி இருந்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் பாஜகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கில் காங்கிரஸ்தான் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் நின்றது என்பதால் மரியாதையை கருதி இங்கே மீண்டும் காங்கிரஸ் நிற்கவே சான்ஸ் உள்ளது. எனவே காங்கிரசுக்கு எதிராக பாஜக தனித்து நிற்கும் முடிவை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications