மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள ஃபால்டா சட்டமன்றத் தொகுதி மறுதேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையைத் தகர்த்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதி, கடந்த 2011 முதல் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் அசைக்க முடியாத பலத்த கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது.

ஏப்ரல் 29 அன்று நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இத்தொகுதியில் பரவலான வாக்குப்பதிவு முறைகேடுகள் மற்றும் வாக்கு இயந்திரங்களில் (EVM) குளறுபடிகள் நடந்ததாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து புகார்களை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், ஃபால்டா தொகுதியின் அனைத்து 285 பூத்களிலும் முந்தைய வாக்குகளை ரத்து செய்துவிட்டு, மே 21 அன்று பலத்த பாதுகாப்புடன் மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது. இதில் 88.13% அளவுக்குப் பதிவான வாக்குகள் மே 24 அன்று எண்ணப்பட்டன.
22 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பாஜக வேட்பாளரும் வழக்கறிஞருமான தேபாங்ஷு பாண்டா (Debangshu Panda) மொத்தம் 1,49,666 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ(எம்) வேட்பாளரை விட 1,09,021 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, இந்தத் தேர்தல் தொடரின் மிக உயர்ந்த வாக்கு வித்தியாச சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளார். இத்தோடு மேற்கு வங்காளத்தின் 294 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 208 ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய தேர்தலில் 207 இடங்களை வென்று சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அங்கு முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான், தான் இப்போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அறிவித்திருந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சிபிஐ(எம்) வேட்பாளர் ஷம்பு நாத் குர்மி 40,645 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் மொல்லா 10,084 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். டிஎம்சி வேட்பாளர் ஜஹாங்கீர் கான் வெறும் 7,783 வாக்குகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள்
இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ஃபால்டா தொகுதி மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளனர். அச்சுறுத்தல் தோற்று ஜனநாயகம் வென்றுள்ளது" என்று தேபாங்ஷு பாண்டாவிற்குத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி: டிஎம்சியின் "டைமண்ட் ஹார்பர் மாடல்" முற்றிலும் சரிந்துவிட்டது என நையாண்டி செய்துள்ளார்.
அபிஷேக் பானர்ஜி (TMC): தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கை வேகம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தங்களது முகவர்கள் பூத்களில் இருந்து மிரட்டி வெளியேற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications