ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் 80 பேர் .. ஈவிகேஎஸ் இளங்கோவன், தென்னரசு வேட்பு மனுக்கள் ஏற்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 121 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற்றது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட 80 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சுயேட்சைகள் பலர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அடுத்தடுத்த நாட்களில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க வேட்பாளர் சிவ பிரசாந்த், ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகன் உள்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி இளையராணி, அவர்களது ஒரே மகள் சத்யா ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தனர்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தென்னரசு நேற்று தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 121 பேர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. முக்கிய வேட்பாளர்களான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் மேனகா, தேமுதிகவின் ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொத்தம் 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட. 41 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 10ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுகவின் தென்னரசு அதிகாரப்பூர்வமாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால் ஓ.பன்னீர் செல்வம் தனது வேட்பாளரான செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படாத காரணத்தால் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாஜக தனது முழு ஆதரவை அறிவித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் நேரடி போட்டியில் இருந்தாலும் திமுக படு பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சார களம் இனி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications