ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்! காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுத் தாக்கல்!
இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் செல்வப்பெருந்தகை மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
பெரியளவில் கூட்டத்தை கூட்டாமல் மிகவும் எளிமையான முறையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
ஈரோடு கிழக்கில் போட்டியிட தயங்கும் பாஜக! பின்வாங்குவது ஏன்? அண்ணாமலை - சிடி ரவி சொன்னது என்ன?
ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள ஈ.வி.கே.எஸ்,இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வுக்கு பெரியளவில் கட்சியினரை திரட்டிச் செல்லாமல் மிகவும் எளிமையான முறையில் 5 பேருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தேர்தல் பணிகள் இருந்ததால் அமைச்சர் முத்துசாமி கூட இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
எனது நோக்கம்
திமுக சார்பில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., வி.சி.சந்திரகுமார் ஆகியோர் இதில் பங்கேற்றனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார். இதனிடையே வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தன்னை பொறுத்தவரை தனது காலத்தில் ஈரோடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.
அண்ணாமலை பெரிய மனிதர்
அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலை ஒரு பெரிய மனிதர், அவரை போன்ற பெரிய மனிதர்களின் பேச்சுக்களுக்கு எல்லாம் தன்னை போன்ற ஒரு சிறிய மனிதர் பதிலளித்தால் அது நன்றாக இருக்காது எனக் கூறி கலாய்த்தார். அண்ணாமலை பேச்சை எந்தக் காலத்திலும் தாம் பொருட்படுத்தியதே கிடையாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்தார்.
7ஆம் தேதி வரை அவகாசம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 7ஆம் தேதி வரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 8ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை தொடங்கிவிடும் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது.