“இளங்கோவனுக்கு” நான் ஓட்டு போட்டேன்.. ஈரோடு கிழக்கில் வாக்களித்த பிறகு காங்கிரஸ் வேட்பாளர் நகைச்சுவை
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதனால் இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த தொகுதியில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

தொடங்கிய வாக்குப்பதிவு
அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
காலையில் இருந்தே வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னுடைய வாக்கை செலுத்தி இருக்கிறார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த அவர் வரிசையில் நின்று தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் என்னுடைய வாக்கை மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு செலுத்தி இருக்கிறேன்.

கை சின்னத்துக்கே ஓட்டு
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் மக்களில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பேர் மதசார்பற்ற கூட்டணி சின்னமான கை சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 20 மாதம் நல்ல ஆட்சியின் அடையாளமாக இது கண்டிப்பாக அமையும்.

2024 தேர்தலின் முன்னோட்டம்
அதேபோல் ராகுல் காந்தி அவர்களின் தியாக நடைபயணத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இந்த முடிவுகள் இருக்கும். வரப்போகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும். வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே மக்கள் மதசார்பற்ற கூட்டணி வெற்றிபெறும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications