மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளரின் பர்னிச்சர் கடையில் ரூ 10 லட்சம் பறிமுதல்! பறக்கும் படை அதிரடி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. சட்டசபைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொடக்குறிச்சி தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில் நாதனும், பாஜக சார்பில் கிருத்திகா சிவக்குமாரும், தவெக சார்பில் சண்முகமும், நாம் தமிழர் சார்பில் அருணும் போட்டியிடுகிறார்கள். இதில் கிருத்திகா, சிட்டிங் பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகளாவார்.

இந்நிலையில் மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வராஜுக்கு சொந்தமான பர்னிச்சர் கடை, விளக்கியத்தி அருகே செயல்பட்டு வருகிறது. இந்தப் பர்னிச்சர் கடையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் பர்னிச்சர் கடையில் சோதனை செய்தனர்.

இதில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட பணமா? அல்லது தொழில் சம்பந்தமாக வைக்கப்பட்டிருந்த பணமா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications