ஈரோட்டில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோதே மாரடைப்பு.. கிளாஸ் ரூமிலேயே பிரிந்த அந்தியூர் ஆசிரியரின் உயிர்
ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.. வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, அவரது உயிரும் பரிதாபமாக பிரிந்துள்ளது. உயிரிழந்த ஆசிரியருக்கு தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.. இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அந்தோணி ஜெரால்ட்.. இவருக்கு 49 வயதாகிறது..

மதிய உணவு: இவர் வழக்கம்போல் நேற்றைய தினம் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். பிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்..
அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன ஆசிரியர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், அந்தோணி ஜெரால்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
நாற்காலியில் பிரிந்த உயிர்: இந்த தகவலறிந்த பர்கூர் போலீசார், விரைந்து வந்து பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்..
நேற்று பாடம் நடத்தி கொண்டேயிருந்த ஜெரால்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.. அப்படியே மயங்கி விழுந்துவிட்டாராம்.. இதைப்பார்த்து பதறிய மாணவர்கள், அருகிலிருந்த ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.. அதற்கு பிறகே ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு, உடனடியாக அவரை மீட்டு காரில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்..
அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் எதிரே வந்து கொண்டிருந்தது.. அந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காரில் இருந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்டை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியிருக்கிறுர்கள்.. இந்த சம்பவம் அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ்: இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியருக்கு, தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது. மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்: அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications