லஞ்சம்.. போலீசை பார்த்ததும் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்க முயன்ற எஸ்ஐ.. ஈரோட்டில் கைது
ஈரோடு: ஈரோட்டில் விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்க முயன்ற பரபரப்பு சம்பவம் நடந்தது. மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். விபத்து வழக்கு ஒன்றில் அவரது வாகனத்தை(டூவீலர்) ஈரோடு ஜிஎச் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அதே போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க பிரகாஷ் கோரியதாக கூறப்படுகிறது.
அதற்கு சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் லஞ்சப்பணம் என்பது ரூ.7 ஆயிரம் குறைத்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பிரகாஷிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை முதலில் சப் -இன்ஸ்பெக்டர் செல்வகுமார் பெற்று கொண்டுள்ளார்.
அதோடு இன்னும் ரூ.5 ஆயிரத்தை கொண்டு வந்து கொடுத்தால் வாகனத்தை விடுவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க பிரகாஷ் விரும்பவில்லை. இதையடுத்து அவர் சம்பவம் தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் பினாப்தலின் எனும் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரகாஷிடம் கொடுத்தனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி பிரகாஷ், சப் -இன்ஸ்பெக்டர் செல்வகுமாரிடம் பினாப்தலின் தடவிய ரூ.5 ஆயிரத்துக்கான ரசாயன ரூபாய் நோட்டுகளை வழங்கினார். இதை வாங்கி கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்தார். இதையடுத்து அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய சென்றனர்.
அப்போது ஷாக்கான சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணத்தை தனது வாயில் போட்டு மெல்ல முயன்றார். இருப்பினும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications