ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக, பாஜகவுக்கு தரக்கூடாது..ஈரோடு தமாகா தீர்மானத்தால் வாசனுக்கு சிக்கல்!
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக, பாஜகவுக்கு விட்டுத் தரக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஈரோடு தமாகாவின் தீர்மானம் அதிமுக-பாஜக- தமாகா கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கனக்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியில் கவனம் செலுத்துகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வென்ற தொகுதி ஈரோடு கிழக்கு தொகுதி. ஆகையால் ஈரோடு கிழக்கு தொகுதி இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை திமுக கூட்டணியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியி ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதி. இதனால் இம்முறையும் தமாகாவே போட்டியிடலாம் என கூறப்பட்டது. இன்னொரு பக்கம், ஜிகே வாசனை சமாதானப்படுத்தி இத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணி களமிறங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னையில் ஜிகே வாசனை அதிமுக மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு தமாகா விட்டு கொடுக்க வாசன் முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாசன், இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டணியின் வெற்றிதான் முக்கியம் என கூறியிருந்தார்.

அதே நேரத்தில் ஈரோடு வில்லரசம்பட்டியில் தமாகாவின் ஈரோடு தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் தமாகா நிர்வாகிகள் விடியல் சேகர், யுவராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிட்டது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை தமாகா இழந்தது.இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமாகா தயாராக உள்ளது.
ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிட்டிருக்கிறது; ஆகையால் அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தலிலும் தமாகாவுக்கே ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும். இதனை ஜிகே வாசனிடமும் வலியுறுத்துவோம். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்பதை ஜிகே வாசன் முடிவு செய்வார். இவ்வாறு விடியல் சேகர், யுவராஜா கூறினர்.












Click it and Unblock the Notifications