ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஒன் மேன் ஷோ! களப்பணியில் டஃப் கொடுக்கும் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
ஈரோடு கிழக்கில் அதிமுக நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் எஸ்.பி.வேலுமணி
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஒன் மேன் ஷோவாக களமிறங்கி களப்பணியில் திமுகவுக்கு கடும் டஃப் கொடுத்து வருகிறார் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
திமுகவுக்கு சளைக்காமல் தாராளம் காட்டும் இவர் தேர்தல் பணிக்காக கோவையிலிருந்து ஒரு பெரிய டீமை ஈரோடு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வார்டு வாரியாக என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை நேரடியாக சென்று ஆய்வு செய்து அதிமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்துகிறார் எஸ்.பி.வேலுமணி.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறாத அமைச்சர்கள் என ஒரு பெரிய படையே திமுக தரப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றியை தனது கவுரவ பிரச்சனையாக கருதுவதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

அதிமுக தரப்பில்
இந்நிலையில் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரட்டை இலையை துளிர்க்க வைப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எஸ்.பி.வேலுமணி திமுகவுக்கு சளைக்காமல் தாராளம் காட்டுவதுடன் பூத் கமிட்டி முகவர்களை தொடர்ந்து சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்களுக்கு கடும் டஃப் கொடுக்கும் வகையில் களப்பணியையும் தீவிரப்படுத்தி வருகிறார்.

நேரடி ஆய்வு
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நேரடியாகவே ஆய்வு செய்து வரும் எஸ்.பி.வேலுமணி, அதிமுக நிர்வாகிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருகிறார். செந்தில்பாலாஜி எப்படி தனது கரூர் டீமை அழைத்து வந்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறாரோ, அதேபோல் வேலுமணி தனது கோவை டீமை அழைத்து வந்து தேர்தல் பணிகளில் களமிறக்கியிருக்கிறார்.

சூடுபிடித்த களம்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான அதிகார மோதலால் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் முடங்கக் கூடும் என திமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதனால் முன்பைக் காட்டிலும் இப்போது அரசியல் களம் ஈரோடு கிழக்கில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications