ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாளை வாக்குப்பதிவு.. மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை செய்து வருவதாகவும், கள்ள ஓட்டு போடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்து 22 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை தக்க வைக்க திமுகவினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றினர்.

அதிமுக பிரச்சாரம்
இதே போல இரட்டை இலை சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்திற்கு மத்தியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைத்துள்ளது. எனவே கொங்கு மண்டலத்தில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக களம் இறங்கியுள்ளது.

வெறிச்சோடிய ஈரோடு
அதேபோல் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை களத்தில் இறங்கி ஈரோடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. வெளியூரில் இருந்த வந்த அரசியல் கட்சியினர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நாளை வாக்குப்பதிவுக்கான பணியை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து உரிய பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தேர்தல் அதிகாரி பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி கூறுகையில், மொத்தமாக 34 பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இடைத்தேர்தலை பொறுத்தவரை அனைத்து விதிமீறல்களும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எச்சரிக்கை
இதுவரை 796 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கும் புகார் அளிக்க ஹெல்ப் லைன் நம்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களிடம் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். அதேபோல் கள்ளவோட்டு பிரச்சினையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் அடையாள அட்டை இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications