செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பேன்.. அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா தடாலடி!
ஈரோடு: வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன் என செங்கோட்டையனை இன்று சந்தித்த பின் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா பேட்டி அளித்துள்ளார். செங்கோட்டையன், தனது மனதில் இருப்பதை பேச உள்ளதாக அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் விழாவைப் புறக்கணித்தார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து செங்கோட்டையன் பேசியது அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அதிமுக தலைவர்களுக்கு கூட தெரியாமல் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதன்பின் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து பேசி இருந்தார். எனினும், அவரை சமாதானப்படுத்த கட்சித் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது.
இந்நிலையில், கோபியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "கோபியில் வரும் 5 ஆம் தேதி காலை செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும்" என்றார். தொடர்ந்து, கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த செங்கோட்டையன், "உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் 5 ஆம் தேதி விடை அளிக்கப்படும்" என்றார். செங்கோட்டையனுக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு நீடித்து வரும் சூழலில் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் இன்று ஆலோசனை நடத்தினார். 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனவர் சத்தியபாமா. அவர் இன்று செங்கோட்டையனைச் சந்தித்துப் பேசினார்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்தியபாமா, "உடல்நிலை சரியில்லாததால் நேற்று செங்கோட்டையன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்த வெற்றியை நாம் அறுவடை செய்ய வேண்டும். 2026ல் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம்.
5 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்பேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே செங்கோட்டையனின் எண்ணம். எப்போதுமே அதைப்பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள். கட்சி நலன் சார்ந்து 2026 தேர்தல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications