ஆந்திரா 'வந்தேறி' அருந்ததியர்- அவதூறு வழக்கில் ஈரோடு கோர்ட்டில் சீமான் ஆஜர்!அக்.10-க்கு ஒத்திவைப்பு!
ஈரோடு: அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள் என விமர்சித்து பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பிப்ரவரி 13-ந் தேதி பொதுக் கூட்டம் ஒன்றில் சீமான் பேசினார். அந்தக் கூட்டத்தில், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா? அத்துடன் இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என பேசியிருந்தார். அதாவது ஆந்திராவில் இருந்து வந்து குடியேறியவர்கள் அருந்ததியர்கள் என சீமான் பேசியிருந்தார்.

சீமானின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரமே செய்ய முடியாத அளவு எதிர்ப்பு வலுத்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சீமானுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சீமான் இன்று நேரில் ஆஜரானார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications