ஈரோடு கிழக்கில் உதயசூரியன் மறைந்தால்.. தமிழ்நாட்டுக்கு விடியல் வரும்.. சீமான் ஆவேச பரப்புரை!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் உதயசூரியன் மறைந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடியல் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இருந்து புரட்சி உதிக்கட்டும் என்று கூறியுள்ள சீமான், வாக்கை பெற்றுவிட்டு ஆளுங்கட்சி நாட்டை விற்பதாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தரப்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே வேட்பாளர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.
பெரியாரை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், அவரின் சொந்த மண்ணிலேயே பரப்புரையில் ஈடுபட்டதால் பலரின் கவனமும் திரும்பியது. இந்த பரப்புரையின் போது சீமான் பேசுகையில், மக்கள் ஒவ்வொருவரும் மாறினால் தான் மாற்றத்தை உருவாக்க முடியும். மீண்டும் மீண்டும் பணத்திற்கு வாக்கை விற்கும் அரசியலை நாம் ஏற்கக் கூடாது.
நாம் நோட்டை வாங்கி கொண்டு வாக்கை விற்கிறோம்.. அவர்கள் வாக்கை பெற்றுக் கொண்டு நாட்டை விற்கிறார்கள். இது தொடர்ந்து நடந்து வருகிறது. திமுக தரப்பில் வாக்கு கேட்போர், கடந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார்களா? மகளிர் உரிமைத் தொகை வந்ததா என்று மட்டும் தான் கேட்பார்கள்.
அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஆண்டில் ரூ.1,000 மட்டுமே கொடுத்தார்கள். இம்முறை அதுவும் கொடுக்கப்படவில்லை. எல்லா வளமும் இருக்கும் இந்த நாட்டில், இலவச அரிசிக்கு மக்கள் கையேந்தும் நிலை தான் உள்ளது. மக்கள் மனதில் புரட்சி மாற்றம் ஈரோடு கிழக்கு இருந்து உதிக்கட்டும்.
உலகில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஒரு புள்ளியில் இருந்து தான் தொடங்கியுள்ளது. திராவிட பூதத்தை உண்டி வில்லில் வீழ்த்த தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி நிற்கிறது. உலகம் முழுவதும் கிழக்கில் சூரியன் உதித்தால் விடியல் வரும். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் உதயசூரியன் மறைந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடியல் வரும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications