செங்கோட்டையன் சித்தப்பாவை தோற்கடிப்பேன்! 1980 வரலாறு திரும்பும்! அண்ணன் மகன் செல்வம் சபதம்!
கோபிசெட்டிபாளையம்: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் கோபிச்செட்டிபாளையத்தில் எனக்கு போட்டியிட வாய்ப்பளித்தால் எனது சித்தப்பா செங்கோட்டையனை நான் தோற்கடிப்பேன் என அவரது அண்ணன் மகன் செல்வம் பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோபியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு வேளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் எனது பெயர் கோபி சட்டசபை தொகுதியின் வேட்பாளரால் அறிவிக்கப்பட்டால் 1980 ஆம் ஆண்டு நடந்த சரித்திரம் மீண்டும் திரும்பும்.
அதாவது அப்போது அவரது சித்தப்பாவை செங்கோட்டையன் தோற்கடித்தார். நான் வரும் 2026இல் எனது சித்தப்பா செங்கோட்டையனை தோற்கடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
அதாவது 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன் 44,703 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எம்.சுப்பிரமணியம் 29,690 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
1980 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் செங்கோட்டையனிடம் தோல்வி அடைந்த சுப்பிரமணியம் வேறு யாருமில்லை, அவரது சித்தப்பா. இதைத்தான் செங்கோட்டையனின் அண்ணன் மகன் தற்போது தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு என்பதை வலியுறுத்திய காரணத்திற்காக அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது நீக்கத்தை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரோ தவெகவில் இணைந்தார்.
முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையை ஏற்ற செங்கோட்டையன், தற்போது விஜய்யின் தலைமையை ஏற்றார். விஜய் கட்சியில் இணைய வரும் போது கூட தனது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார். அது போல் அவர் தனது கட்சி அலுவலகத்தில் கூட எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைத்துள்ளார். அவர்களுடன் விஜய் படத்தையும் வைத்துள்ளார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை தோற்கடிக்க வேண்டும், அங்கிருந்து முக்கிய நிர்வாகிகளை எல்லாம் அழைத்து கொண்டு தவெகவில் சேர்க்க வேண்டும் என்ற பணியை செங்கோட்டையன் செய்து வருகிறார்.
தேர்தலுக்குள் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறி வருகிறார். மேலும் வரும் 18ஆம் தேதி ஈரோட்டில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் விஜய் பங்கேற்கிறார். அன்று யாராவது முக்கியஸ்தர்கள் இணைவார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில்தான் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனது சித்தப்பாவையே தோற்கடிப்பேன் என செல்வம் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவர். அவருக்கு நிறைய செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கே சவால் விடும் அளவுக்கு செல்வம் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications