ஈரோடு கிழக்கில்.. அதிமுகவினர் கொலுசு கொடுக்குறாங்களாமே? ஒரே வார்த்தையில் உதயநிதி "பளீர்" பதில்
ஈரோடு கிழக்கில் இன்றும் நாளையும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் அதிமுகவினர் கொலுசு கொடுப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களுக்கு கொலுசு , குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களுக்கு வீடு வீடாக குக்கர் வழங்கப்படுவதாகவும், பெண்களுக்கு பாக்கெட்டுகளில் கொலுசு வழங்கப்படுவதாகவும் புகார் வைக்கப்பட்டது.
மக்களுக்கு கொலுசு, குக்கர் விநியோகம் செய்யப்பட்டதாக பறக்கும் படையினருக்கும் புகார் சென்றுள்ளது.

ஈரோடு கிழக்கு
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், ஈரோடு கிழக்கில் அதிமுகவினர் கொலுசு கொடுக்கிறார்களாமே என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதிலில், ஈரோடு கிழக்கில் மக்கள் தெளிவாக முடிவு எடுப்பார்கள். மக்கள் வேட்பாளரை பார்த்துதான் வாக்களிப்பார்கள். பிரச்சாரம் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் இப்போதுதான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு செல்கிறேன்.

பார்க்கிறேன்
தொகுதியில் இன்றில் இருந்து பிரச்சாரம் செய்கிறேன். பிரச்சாரம் முடித்துவிட்டு வரும் போது உங்களுக்கு சொல்கிறேன். அங்கே சென்று நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன், என்று அதிமுக கொலுசு கொடுப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். ஈரோடு கிழக்கில் இன்றும் நாளையும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இன்று பிற்பகல்தான் அவர் ஈரோடு வந்தார் என்பதால் மாலை சில இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்வார். குமலன்குட்டை, இடையன்காட்டுவலசு , கணபதிநகர், நாராயணவலசு, உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இன்று மாலை பிரச்சாரம் செய்கிறார்.

நாளை பிரச்சாரம்
நாளை பெரும்பாலான இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஆகிய பகுதிகளில் இன்று மாலையே பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேரம் இருக்கும் பட்சத்தில் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் இன்று மாலை பிரச்சாரம் செய்வார். இல்லையென்றால் நாளை இங்கே பிரச்சாரம் மேற்கொள்வார். இது போக எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் நாளை மாலை பிரச்சாரம் செய்யவுள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனை
இன்று ஈரோடு கிழக்கில் சிந்தா நகர், மாதவ காடு பகுதிகளில் பறக்கும் படையினர் களமிறங்கி சோதனை செய்தனர். ஆனால் குக்கர், கொலுசு எதுவும் அங்கே பறிமுதல் செய்யப்படவில்லை. மற்ற பகுதிகளில் தற்போது பறக்கும்படையினர் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினர் தற்போது இங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பறக்கும்படையினர் தற்போது இங்கே வார்டு வாரியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே இருக்கும் குடோன்களிலும் தற்போது பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். பெரிய கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறதா என்றும் பறக்கும் படையினர் விசாரணை செய்து வருகின்றனர். வார்டு வாரியாக சாலைகள் அடைக்கப்பட்டு வாகனங்களில் செல்பவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியே பதற்றத்துடன் காணப்படுகிறது,












Click it and Unblock the Notifications