ஆமா.. ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு எப்போது? செங்கோட்டையன் சொன்ன பதில்!
கொங்கு மண்டலம் அதிமுக எஃகு கோட்டை என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை என்றும், அதனை யாராலும் தகர்க்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதேபோல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கூறிய செங்கோட்டையன், வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் அவகாசம் இருப்பதாக கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அதிமுகவால் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டது.
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தரப்பில் வேட்பாளரை அறிவித்தால் ஆதரவு அளிக்கப்படும் என்றும், இல்லையென்றால் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு.. எடப்பாடி மனு.. 3 நாள் டைம்.. தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணை
அதிமுக வழக்கு
இவ்வாறு இரு தரப்பிலும் வேட்பாளரை நிறுத்தினால், இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்யவும், இடைக்கால பொதுச்செயலாளர் என ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் கோட்டை
இதனிடையே ஈரோட்டில் முகாமிட்டுள்ள அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கொங்கு மண்டலம் என்பது அதிமுக எஃகு கோட்டை. இதனை யாராலும் தகர்க்க முடியாது. அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பணியாற்ற உள்ளார்கள்.
விரைவில் வேட்பாளர் அறிவிப்பு
இந்த இடைத்தேர்தல் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த இடைத்தேர்தல் திருப்புமுனை தேர்தலாக அமையும். இந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று தெரிவித்தார். தொடர்ந்து வேட்பாளர் அறிவிப்பு பற்றிய கேள்விக்கு, விரைவில் அதிமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
விமர்சிக்க விரும்பவில்லை
பின்னர் இரட்டை இலை சின்னம் பற்றிய கேள்விக்கு, வழக்கு மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சரியான முடிவுகள் முன்னெடுத்து செல்லப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுகவினர் அச்சமின்றி செயல்பட்டு வருகிறோம். முழுமனதோடு வெற்றி கிடைக்கும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டு வருகிறோம். இடைத்தேர்தல்களில் அமைச்சர்கள் பணியாற்றுவது வழக்கம் தான். தேர்தல் களம் என்பதால் விமர்சிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
அவகாசம் இருக்கிறது
தொடர்ந்து, வேட்பாளர் அறிவிப்புக்கு என்ன தாமதம் என்ற கேள்விக்கு, தேர்தல் களத்தை பொறுத்த வரையில் வேட்புமனு தாக்கலுக்கு நாட்கள் இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் அவகாசம் நிறைய இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்.7ம் தேதி தான் கடைசி நாளாகும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதனை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.