"ஓகே..வா.. நல்லா புடிச்சுக்கோ.. வாடா.. வாடா.." சத்தியமங்கலத்தை பரபரப்பாக்கிய மாரிமுத்து
சத்தியமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்டனர்
ஈரோடு: "ஓகே..வா.. தூக்கிடலாமா? நல்லா புடிச்சுக்கோ.. வாடா.. வாடா.. மேல வாடா" என்ற கோஷம் சத்தியமங்கலம் பகுதியை பரபரப்பாக்கிவிட்டது.
Recommended Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கண கவுண்டன் புதூர் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து... இவர் தன்னுடைய வீட்டில் 5-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்... அவை எல்லாமே வெள்ளாடுகள்.

இந்நிலையில், இன்று காலை தனது வெள்ளாடுகளை வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.. அப்போது, வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் ஒரு வெள்ளாடு தவறி விழுந்துவிட்டது.. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை.. வற்றிய நிலையில் பயன்பாடும் இன்றி செடிகளுடன் கிடந்தது.. கிட்டத்தட்ட 70 அடி ஆழம் இருக்கும் அந்த கிணறு.

கிணற்றில் வெள்ளாடு தவறி விழுந்து கத்த ஆரம்பித்துவிட்டது.. உயிருக்கு போராடிய வெள்ளாட்டை பார்த்ததும் மாரிமுத்து பதறி போய்விட்டார்.. தண்ணீர் இல்லை என்றாலும், கிணறு 70 அடி ஆழம் உடையது.. அதனால் வெள்ளாட்டை மீட்பது சாத்தியமில்லை என்பதை அறிந்த மாரிமுத்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி வெள்ளாட்டை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.. கயிறுடன் கிணற்றுக்குள் ஒரு வீரர் உள்ளே இறங்கி பத்திரமாக வெள்ளாட்டை எடுத்து இடுப்பில் வைத்து கொண்டார்.. பிறகு மேலே இருந்து வீசப்பட்ட கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டார்.. அந்த கயிறை மற்ற வீரர்கள் இழுத்து பிடிக்க, மேலே வந்து சேர்ந்தார் தீயணைப்பு வீரர்.

கூடவே அந்த வெள்ளாடும் திருதிருவென விழித்து கொண்டே வந்தது.. வெள்ளாட்டை பார்த்ததுமே மாரிமுத்து உட்பட வீரர்கள் அனைவரும் கையை தட்டி ஆரவாரம் செய்தனர்.. உயிருடன் வெள்ளாடு மீட்கப்பட்ட சம்பவமும், அந்த மீட்பு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications