ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் ஆலை விரிவாக்கம்.. 450 பேருக்கு வேலை.. எப்போது பணிகள் தொடங்கும்?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையை ரூ.900 கோடியில் 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் மில்கி மிஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்யவுள்ளது. ரூ.1,777 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், முதல் கட்டமாக ரூ.900 கோடிக்கு முதலீடு செய்யவுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1997ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டது மில்கி மிஸ்ட் நிறுவனம். பால் மட்டுமல்லாமல் தயிர், பன்னீர், ஐஸ் க்ரீம் என்று புதிய வழியை கண்டறிந்து வெற்றி பெற்ற நிறுவனங்களில் மில்கி மிஸ்ட் நிறுவனமும் ஒன்றாகும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

தொடர்ச்சியாக வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த விநியோகம் காரணமாக முன்னணி பிராண்டாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மொத்தமாக மில்கி மிஸ்ட் நிறுவனம் தரப்பில் ரூ.1,777 கோடி முதலீடு செய்வதாக இருந்தது.
இதில் முதற்கட்டமாக ரூ.900 கோடியை மில்கி மிஸ்ட் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையில் 2.26 லட்சம் சதுர மீட்டர் பரபரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதால், மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இவ்வாறு விரிவாக்கம் செய்யப்படும் மில்கி மிஸ்ட் ஆலையில் பன்னீர், ஐஸ் க்ரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்யவுள்ளது. தற்போதைய தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கு பல்வேறு துறைகளிலும் அனுமதி பெற வேண்டி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த துறைகளின் ஒப்புதல் கடிதம் கிடைத்த உடனடியாக கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications