எங்களை அமைச்சராக ஏன் பார்க்குறீங்க! அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டோம்! டென்ஷனான முத்துசாமி!
தனது ஆரம்பகால அரசியல் சிஷ்யன் எடப்பாடிக்கு அமைச்சர் முத்துசாமி பதில்.
ஈரோடு: ''எங்களை ஏன் அமைச்சராக பார்க்கிறீங்க, அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு தான் இங்கே வந்திருக்கிறோம்'' என ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.
திமுகவுக்கு தோல்வி பயம் வந்ததால் தான் 20 அமைச்சர்களை களமிறக்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
''அமைச்சராக இல்லாவிட்டால் கூட ஒரு திமுககாரனாக இங்கே வேலை பார்ப்போம்ல'', அப்படி எடுத்துக் கொள்ளுங்கள் என அமைச்சர் முத்துசாமி எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறியிருக்கிறார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் முத்துசாமி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது ஆதரவாளராக திகழ்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதேயாகும்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறாத அமைச்சர்கள் என ஒரு பெரிய படையே திமுக தரப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றியை தனது கவுரவ பிரச்சனையாக கருதுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

என்னிடம் கேட்காதீர்
இதனால் அவரே 2 நாட்கள் அங்கு பிரச்சாரத்துக்கு செல்லவுள்ளார். அதுமட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில் ஈரோட்டில் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் முத்துசாமி, எடப்பாடி பழனிசாமி பேசுவதை வைத்தெல்லாம் தன்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என்றும் அவர் திமுகவை குறை கூறுவதை தவிர வேறு எதை பேசுவார் என எதிர்பார்க்கிறீர்கள் எனவும் செய்தியாளர்களிடம் கேட்டார்.

என்ன செய்தார் எடப்பாடி?
மேலும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை அதிமுக ஆட்சியில் நினைத்திருந்தால் முடித்திருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றும் 30 விவசாயிகளின் நிலம் மட்டும் பிரச்சனையாக இருந்தது அதை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பேசி சுமூகமாக்கப்பட்டு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் ஈரோடு மாநகருக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்கிறார் என வினவிய அவர், ஸ்டாலின் முதல்வரான பிறகு ஈரோடு மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

20 அமைச்சர்கள்
திமுகவுக்கு தோல்வி பயம் வந்ததால் தான் 20 அமைச்சர்களை களமிறக்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டென்ஷனாக பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, ''எங்களை ஏன் அமைச்சராக பார்க்கிறீங்க, அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு தான் இங்கே வந்திருக்கிறோம். இங்கே பாருங்க எங்க கூட போலீஸ் யாரும் இருக்காங்களா, தனி ஆளாக தான் பிரச்சாரம் செய்கிறோம்'' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications