விழுந்து விழுந்து வேலை செய்யும் போது செய்தி ஆவதில்லை.. ஆனால் நான் விழுந்தால்.. தமிழிசை ஆதங்கம்!
நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தியாவதில்லை. ஆனால் நான் விழுந்தால் பெரிய செய்தியாகிறது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஈரோடு: செங்கல்பட்டு அருகே நேற்று நடைபெற்ற ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கால் இடறி கீழே விழுந்தார். இந்த நிலையில் இது குறித்து பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தி ஆவதில்லை. ஆனால் நான் விழுந்தால் அது பெரிய செய்தி ஆகிறது" என்று கலகலப்பாக பேசியுள்ளார்.
புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- அனைவருமே யோகா கற்றுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

நான் விழுந்தால் பெரிய செய்தியாகிறது
நான் வரும் போது ஒரு பெரியவர் என்னிடம் 2 செல்போன்கள் எப்படி வைத்து இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அப்போது, 2 மாநிலத்தையே சமாளிக்கிறேன். 2 செல்போனை சமாளிக்க முடியாதா என்று நான் கூறினேன். இதேபோலத்தான் அனைவரும் பணியாற்ற வேண்டும். நான் 48 மணி நேரம் வேண்டும் என்றாலும் தொடர்ச்சியாக பணி செய்ய தயராக உள்ளேன். நான் விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தியாவதில்லை. ஆனால் நான் விழுந்தால் பெரிய செய்தியாகிறது" என்றார்.

கால் தடுமாறி கீழே விழுந்த
முன்னதாக நேற்று செங்கல்பட்டில் இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ரெட் கார்பெட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார், உடனே அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை குறிப்பிட்டுத்தான் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- ஆளுநர்கள், குடியரசுத்தலைவர், உள்துறை அமைச்சகத்தால் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும் திறமனையாவர்களையும் அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறது.

மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்
மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் எம்.பிக்கள் ஆகியிருப்போம். மத்திய அமைச்சர்கள் ஆகியிருப்போம். தோற்கடிக்கப்பட்டதால் எங்களின் திறமையை வீணடிக்க வேண்டாம் என்று விரும்பிய மத்திய அரசு எங்களை ஆளுநர்களாக ஆக்கியுள்ளது. எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதை நான் சொன்னால் கூட இதுபற்றியும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வரலாம்" என்றார்












Click it and Unblock the Notifications