சட்டென திறந்தவெளி வாகனத்தில் ஏறி ரோடு ஷோ நடத்திய செங்கோட்டையன்! கோபியில் திரண்ட அதிமுக தொண்டர்கள்
ஈரோடு: அதிமுகவில் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் செங்கோட்டையன் தனது நிலைப்பாடு குறித்து இன்று பேசுகிறார். அதற்கு முன்னதாக இன்று கோபியில் சட்டென திறந்தவெளி வாகனத்தில் ஏறிய செங்கோட்டையன் தொண்டர்களைச் சந்தித்தபடி ரோட்ஷோ பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் என்றாலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேநேரம் அதிமுகவிலும் இப்போது மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த சில காலமாகவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் எடப்பாடி நடத்தும் கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்திருந்தார். அதன் பிறகு சீனியர் தலைவர்கள் தலையிட்ட பிறகே செங்கோட்டையன் சமாதானமானார்.
இருப்பினும், இப்போது மீண்டும் செங்கோட்டையன் அதிருப்தி மோடிற்கு சென்றிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் இது குறித்த கேட்ட போது, இன்று செப்டம்பர் 5ம் தேதி மனம் திறந்து பேசப்போவதாகக் கூறியிருந்தார். இதனால் செங்கோட்டையன் என்ன சொல்லப்போகிறார் என்பதில் எதிர்பார்ப்பு எகிறியது.
கோபி அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கூடினர். கூட்டம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது. இதனால் சட்டென திறந்தவெளி வாகனத்தில் ஏறிய செங்கோட்டையன் தொண்டர்களைச் சந்தித்தபடி ரோட்ஷோ பயணம் மேற்கொண்டார். கோபி அதிமுக அலுவலகத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ள தொண்டர்களை ரோட் ஷோவில் சந்தித்தார்.
கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி அதிமுக அலுவலகத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications