தமிழக பாஜக தலைவராகிறாரா எடப்பாடி பழனிசாமி?.. ஓபிஎஸ்ஸுக்கும் சூப்பர் பதவியாமே.. உதயநிதி கலகல பேச்சு
தமிழக பாஜக தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொள்வார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு: தமிழக பாஜக தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், கலைஞரின் பேரன் பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்க வந்திருக்கிறேன். கடந்த முறை 9000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவர். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டியடிக்கிறார்கள்.

மீசை
இதை டிவிக்களில் பார்க்க முடிகிறது. அந்த விரக்தியில்தான் இங்கு வந்த போது ஆம்பளையா என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, ஆம்பளையாக இருந்தால் மீசை இருக்க வேண்டும். வேட்டி கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அவருக்கு மீசை இருக்குனு தெரியும். தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் அந்த மீசை என்ன செய்தது.

பெண்ணுரிமை
பெண்ணின் சம உரிமைக்கு போராடிய பெரியாரின் மண்ணில் இருந்து இதை பேசியிருக்கிறார். நீங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவரா, நீங்கள் எப்படி முதல்வர் ஆனீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்பவும் அடிமையாக இருக்கிறார்கள். அண்ணா ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார்.

19 தீர்மானங்கள்
சட்டசபை நிறைவேற்றிய 19 தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் ஆளுநர் இருக்கிறார். எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் அவர்களுடைய பிரச்சினைக்கு பிரதமர் மோடிகிட்ட போனாங்க, என்றைக்காவது மக்கள் பிரச்சினைக்கு போயிருக்கிறார்களா? ஒரு முறை தவறுதலாக எடப்பாடி என் வண்டியில் ஏற போயிட்டாரு! அப்பவே கமலாலயத்திற்கு மட்டும் போயிடாதீங்கன்னு சொன்னேன். இப்போ இரண்டு பேருமே போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் போகிறார்கள்.

1000 கோடி ரூபாய்
ஈரோட்டில் 1000 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள்தான் இருக்கிறது. உங்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு அளியுங்கள் என்றார். பின்னர் பாஜக என்றால் கவர்னர் டிரெய்னிங் சென்டர் என்ற பொருள்படும். தமிழகத்திலிருந்து பாஜக தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆளுநராக்கிவிடுகிறார்கள். அந்த வகையில் தமிழிசை, இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாகிவிட்டனர். அந்த வகையில் ஓபிஎஸ்ஸும் இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராவார். அது போல் தமிழக பாஜக தலைவராக பழனிசாமி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என உதயநிதி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications