அப்பாடா.. ஒருவழியா டெபாசிட்டை பிடிச்சாச்சு.. 10வது சுற்றில் ‘மேஜிக்’ நம்பரை தொட்ட அதிமுக வேட்பாளர்!
ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட்டை தக்கவைத்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளரை விட சுமார் 3 மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளரின் டெபாசிட் தப்பிக்குமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில், அந்த 'மேஜிக்' நம்பரை தொட்டுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. 10வது சுற்று முடிவில் 28,637 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை காப்பாற்றியுள்ளார் தென்னரசு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தொடர்ந்து இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகளிலும் ஈவிகேஎஸ் இளங்கோவனே முன்னிலை வகித்தார். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன.

டெபாசிட்
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஒவ்வொரு வேட்பாளரும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாக கட்ட வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பொது பிரிவு வேட்பாளர் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும். எஸ்.சி எஸ்.டி பிரிவைச் சேர்ந்த வேட்பாளார் ரூ. 5000 டெபாசிட் தொகை கட்ட வேண்டும். அந்த தேர்தலில் அந்த வேட்பாளர் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றால் அவருக்கு அவர் கட்டிய டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குளைப் பெறவில்லை என்றால் அவர் கட்டிய டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

தொடர் முன்னிலை
தற்போதைய சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,834 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதாவது, காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 3 மடங்கு வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தபால் வாக்குகளிலும் சரி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளிலும் சரி தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனே முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,117 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் 803 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

28 ஆயிரம் வாக்குகள் டார்கெட்
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இருந்த நிலையில், அதில் 74.79 சதவீதமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். அதில், வாக்களித்ததில் 82 ஆயிரத்து 138 பேர் ஆண்கள் என்றும், 88 ஆயிரத்து 37 பேர் பெண்கள் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றால் மட்டுமே டெபாசிட் தப்பிக்கும். அதாவது, 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றால் தான் டெபாசிட் தப்பிக்கும்.

வித்தியாசம் 45,000
தற்போதைய சூழலில் அதிமுக வேட்பாளரை விட சுமார் 3 மடங்கு வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இப்போதே வாக்கு வித்தியாசம் 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 28,366 வாக்குகளுக்கு குறைவாக பெற்றால், அதிமுக வேட்பாளார் டெபாசிட் இழப்பார் என்ற நிலை இருந்தது. தற்போது இந்த 'மேஜிக்' நம்பரை கடந்துள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. அதே சமயம், தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

டெபாசிட்டை தக்கவைத்த தென்னரசு
கடந்த தேர்தலில் காங்கிரஸின் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வென்றார். ஆனால், இப்போது 10வது சுற்றிலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் 76 ஆயிரம் வாக்குகளைக் கடந்துள்ளார். இடைத்தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் டெபாசிட் இழந்தால் அது மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்படும் என்ற சூழலில் டெபாசிட்டை தக்க வைத்துள்ளார் தென்னரசு. அதிமுக வேட்பாளர் தென்னரசு, பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று டெபாசிட்டை தக்கவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications