உறுதியாக சொன்ன டிடிவி தினகரன்.. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அமமுகவை ஆதரிப்பாரா? அப்போ பாஜக? குழப்பம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக தரப்பு வேட்பாளர் போட்டியிட உள்ளதால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை எதிர்க்காமல் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அமமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. டிடிவி தினகரன் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை ஆதரிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது.. நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பிவிட்டு ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் இருந்த போது அவர் டிடிவி தினகரனுக்கு, சசிகலாவிற்கும் எதிரியாக இருந்தார்.
அதே நாட்களில் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனுக்கு நண்பனாக இருந்தார். ஆனால் ஆட்சி வந்த பின் எடப்பாடி எதிராக மாறிவிட்டார்.

ஒற்றை எடப்பாடி
அதன்பின் ஓபிஎஸ் டிடிவி இருவரும் நெருக்கமாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் அதிமுகவில் இரு துருவங்களாக இருந்த ஓபிஎஸ் - டிடிவி இருவரும் சந்திப்பு நடத்த போவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நாட்களில் இருந்தே ஓபிஎஸ் - டிடிவி ஆகியோர் நெருக்கமாகி வருகின்றனர். ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவிற்கு பின் இவர்கள் இருவரும் மேலும் நெருக்கமாகிவிட்டனர். எடப்பாடி அதிமுகவை தனி ஆளாக அபகரிக்க பார்ப்பதாக டிடிவி - ஓபிஎஸ் இருவரும் ஒரே குரலில் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

ஓபிஎஸ்
கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிமுகவில் மீண்டும் சசிகலா - டிடிவி தினகரன் இணைய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும். அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்றால் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்று சசிகலா கூறியுள்ளார். இன்னொரு பக்கம் டிடிவி தினகரனும் இதை வரவேற்றுள்ளார். தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள் என்று டிடிவி தினகரனும் இதை வரவேற்று உள்ளார்.

நெருக்கம்
இருவரும் விரைவில் சந்திக்க போவதாகவும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அமமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. டிடிவி தினகரன் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை ஆதரிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. நாளை அமமுக சார்பாக போட்டியிடப்படும் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் ஓபிஎஸ் டிடிவி தினகரனை எதிர்க்காமல் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிஎஸ் நிலைப்பாடு
ஏற்கனவே அதிமுக சார்பாக கண்டிப்பாக வேட்பாளரை களமிறக்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இன்னொரு பக்கம் நாங்கள்தான் உண்மையான அதிமுக. எங்கள் சார்பாகவும் வேட்பாளரை களமிறக்குவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான். அதோடு பாஜக சார்பாக வேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தனித்து போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு கொடுப்போம் என்று, ஓ பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார். இன்னும் பாஜக இதில் நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

என்ன நடக்கும்?
ஒருவேளை பாஜக இங்கே போட்டியிடாமல் எடப்பாடியை ஆதரிக்க முடிவு செய்தால் ஓபிஎஸ் தனித்துவிடப்படுவார். பாஜக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஆதரவு கொடுத்தால் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலமே முடிவிற்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. பாஜகவே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் அவர்கள்தான் உண்மையான அதிமுக. ஓ பன்னீர்செல்வத்திற்கு தற்போது டெல்லி ஆதரவும் இல்லை என்று வாதம் வைக்கப்படும். இதை சமாளிக்கும் வகையில் ஓபிஎஸ் தனது வேட்பாளரை களமிறக்காமல் டிடிவி தினகரன் தரப்பு வேட்பாளரை ஆதரிப்பாரா.. டிடிவி தினகரன் தரப்பு வேட்பாளரை ஆதரித்து நேரடியாக தேர்தலை எதிர்கொள்ளாமல் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications