இரவில் வகுப்பறை பெஞ்சில் சோர்வாக வந்து படுத்த மாணவி.. கள்ளக்குறிச்சி பள்ளி சிசிடிவி காட்சி உண்மையா?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிதனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த 13ம் தேதி நள்ளிரவு அல்லது அதிகாலை, 2வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 17ம் தேதி, கலவரம் வெடித்தது.
இதில் பள்ளியின் பேருந்து, வகுப்பறைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. பள்ளியில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் கொளுத்தப்பட்டன.

இரு வேறு கருத்துகள்
இந்த சம்பவம் தொடர்பாக இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. மாணவி சாவுக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் இதை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தற்கொலையா அல்லது வேறு பிரச்சினையா என்பதில் தெளிவு இல்லை என்பதால், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சிபிசிஐடி
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதில் இறந்த மாணவியின் பள்ளிக்கு நேற்று சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கு ஏதாவது தடயங்கள் கிடைக்கின்றனவா என ஆராய்ந்தனர். மேலும் மாணவியின் எடை கொண்ட ஒரு பொம்மையை மாணவி விழுந்ததாக சொல்லப்படும் 2ஆவது மாடியிலிருந்து தூக்கி போட்டனர். அதன் தாக்கத்தை கணக்கிட்டனர். அதை பல கோணங்களில் தூக்கி போட்டு ஆய்வு நடத்தினர்.

278 பேர் கைது
இதனிடையே பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டதாக 20 சிறுவர்கள் உள்பட 278 பேர் கைது செய்யப்பட்டனர். இன்றைய தினம் இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீஸார் பள்ளியில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மாணவியின் இறப்புக்கு நீதி , நியாயம் கேட்டு ஆங்காங்கே போராட்டம் நடத்த சிலர் அழைப்பு விடுத்து வருகிறார்கள். போலீஸாரும் அந்த போராட்டங்களை தடுக்கும் விதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில் மாணவி தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அந்த மாணவி 12ம் தேதி இரவு வகுப்பறை போன்று உள்ள ஒரு பகுதிக்கு வருகிறார் என்பது போல காட்சி உள்ளது. அது ஸ்டடி ரூம் என்றுச் சொல்லப்படுகிறது. உள்ளே வரும்போதே மிகவும் சோர்வாக காணப்படுகிறார். பின்னர் தனக்கான பெஞ்ச்சில் அமர்கிறார். கீழே குனிந்து ஏதோ செய்கிறார். பின்னர் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சிலேயே படுத்துவிடுகிறார்.

காவல்துறை உறுதி செய்யவில்லை
இந்த காட்சியில் பல சந்தேகங்கள் உள்ளன. மாணவி உடல் சோர்வால் இப்படி வந்தாரா, மனச் சோர்வால் இப்படி வந்தாரா என்பது ஒரு சந்தேகம் என்றால், சக மாணவிகள் சிலர் அடுத்த இருக்கையில் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தபோதும், இந்த மாணவியை பார்த்து நலம் விசாரிக்கவில்லையே ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், சிசிடிவி காட்சியில் காண்பிக்கும் தேதி 12ம் தேதி இரவு என இருந்தபோதிலும், இது உண்மைதானா என்பதை உறுதி செய்ய யாரும் இல்லை. ஏனெனில் இந்த வீடியோ போலீசாரால் வெளியிடப்படவில்லை. இதேபோலதான், அன்றைய தினம் இரவு ஸ்டடி ரூமை விட்டு மாணவி வெளியேறும் ஒரு காட்சியும் வெளியாகியுள்ளது. அதிலும் சோர்வாக அவர் நடந்து செல்கிறார். ஆனால் சக மாணவிகள் யாருமே உடன் இல்லை. இந்த காட்சியில் இருப்பது அந்த மாணவிபோல இருந்தாலும், அது மாணவிதானா என்பதை காவல்துறை இன்னும் உறுதி செய்யவில்லை. எனவே இந்த வீடியோ தொடர்பான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications