ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட 1% கூட நோ சான்ஸ்... ஓசூரில் இபிஎஸ் திட்டவட்ட அறிவிப்பு
ஓசூர்: அண்ணா திமுகவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு 1% கூட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் இபிஎஸ் பிரிவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இபிஎஸ் பங்கேற்றார்.
அப்போது பேசிய இபிஎஸ், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வர வாய்ப்புள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும். இரு தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுகவின் அவல ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு திமுக கூட்டணி மமக தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு?
அதிமுகவில் பிளவு இல்லை
மேலும் ஆளும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. திமுக உட்கட்சி பிரச்சனையால் தள்ளாடி வருகிறது. ஆனால் அதிமுக பிளவுபட்டுவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
இந்தியை திணித்த காங்கிரஸ்
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதுதான் இந்தி மொழி திணிக்கப்பட்டது. அதே கட்சியுடன்தானே திமுக கூட்டணி வைத்திருக்கிறது. இந்தி திணிப்பு பற்றி எல்லாம் பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது. அதிமுகவில் ஓபிஎஸ் இணைப்பு என்ற பேச்சுக்கு இடமே கிடையாது. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவு இறுதியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான். என்றும் இபிஎஸ் பேசினார்.
ஓபிஎஸ்-க்கு நோ சான்ஸ்
இதேபோல் ஓசூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் குறித்து விமர்சித்தார் இபிஎஸ். ஓசூர் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுகவை அழிக்க நினைப்பவர் ஓபிஎஸ். அதிமுகவை அழிக்க நினைக்கும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு 1% கூட வாய்ப்பு இல்லை. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நீக்கப்பட்டவர் ஓபிஎஸ்.
விசுவாசம் இல்லாதவர் ஓபிஎஸ்
ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அநத வாய்ப்பை வழங்கிய போது எல்லாம் அதிமுகவை அழிக்கத்தான் அவர் முயற்சித்தார். அதிமுக கட்சிக்கும் தொண்டர்களுக்கும் விசுவாசமே இல்லாதவர் ஓபிஎஸ். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.