2018-ல் அதிரவைத்த தெலுங்கானா ஜாதி ஆணவக் கொலை- கூலி படை தலைவனுக்கு மரண தண்டனை- 6 பேருக்கு ஆயுள் சிறை!
ஹைதராபாத்: 2018-ம் ஆண்டு நாட்டையே அதிரவைத்த தெலுங்கான ஜாதி ஆணவக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான கூலிப்படை தலைவனுக்கு மரண தண்டனை விதித்தும் இதர 6 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது தெலுங்கானா நல்கொண்டா நீதிமன்றம்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தலித் இளைஞரான பிரனாய் குமார், மற்றொரு ஜாதியை சேர்ந்த அம்ருதாவை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த் திருமணத்துக்கு அம்ருதாவின் தந்தையான ரியல் எஸ்டேட் அதிபர் மாருதி ராவ் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் பிரனாய் குமாரை தொடர்ந்து மாருதி ராவ் மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி மிரியாலகுடா மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவியான அம்ருதாவை அழைத்து வந்த போது அனைவரது முன்னிலையில் பட்டப்பகலில் பிரனாய் குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தலித் இளைஞர பிரனாய் குமார், ஜாதி ஆணவத்தால் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மற்றும் சகோதரர் ஷ்ரவண் ராவ் ஆகியோர் ஏவிய கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்காக கூலிப் படையினருக்கு ரூ.1 கோடி பணம் கைமாறியதும் அம்பலமானது. படுகொலை செய்யப்பட்ட பிரனாய் குமாருக்கு நீதி கோரி நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பிரனாய் குமார் படுகொலை வழக்கு, தலித்- பழங்குடிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், சகோதரர் ஷ்ரவண் ராவ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலையான அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக 7 குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
தற்போது நல்கொண்டா தலித்- பழங்குடிகள் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றமானது இந்த ஜாதி ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இதில் கூலிப்படை தலைவனான சுபாஷ் குமாருக்கு மரண தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். அம்ருதாவின் சகோதரர் ஷ்ரவண் ராவ் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications