தடுப்பூசிக்கு ஏங்கும் இந்தியாவுக்கு குட் நியூஸ்.. 30 லட்சம் 'ஸ்பூட்னிக் வி' டோஸ்கள் ஹைதராபாத் வருகை
ஹைதராபாத்: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் 3 மில்லியன்(30 லட்சம்) அளவுள்ள டோஸ்கள் இன்று இந்தியா வந்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வெகுவாக குறைந்து நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.
கொரோனா குறைந்து வரும் இந்த வேளையில் நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலமும் தடுப்பூசி தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.

தடுப்பூசி தட்டுப்பாடு
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திட்டமிட்டபடி கடந்த மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தொடங்கப்படவில்லை. அனைத்து மாநிலமும் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. தமிழகத்தில் கூட 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதனை அதிகளவில் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே வேளையில் ஃபைசர் மற்றும் மாடர்னா உருவாக்கிய தடுப்பூசிகள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் உள்ளிட்ட தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் வந்தன
இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் 3 மில்லியன்(30 லட்சம்) அளவுள்ள டோஸ்கள் இன்று ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:43 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்துக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் 3 மில்லியன்(30 லட்சம்) அளவுள்ள டோஸ்கள் வந்திறங்கின. இதுவே இந்தியாவில் இறக்குமதியான அதிகளவு தடுப்பூசிகள் இந்தியா தடுப்பூசிக்கு எதிர்நோக்கி இருக்கும் நிலையில் 30 லட்சம் ஸ்பூட்னிக் வி டோஸ்கள் வருகை ஆறுதலாக அமைந்துள்ளது.

அனுமதி யாருக்கு?
ஆறு லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பூட்னிக்-வி டோஸ்கள் மே மாதத்திலும், ஜூன் மாதத்தில் ஒரு கோடி இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பூட்னிக்-வி டோஸ்களும் , ஜூலை மாதத்தில் 2.8 கோடி ஸ்பூட்னிக்-வி டோஸ்களும் (2.4 கோடி இறக்குமதி மற்றும் 40 லட்சம் இந்தியாவில் தயாரிக்கப்படும்) நாட்டில் பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்தன. ஆகஸ்ட் மாதம் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறின. ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் நிறுவனம் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications