திட்டமிட்டு இரவு முழுக்க சிறையில் வைக்கப்பட்ட அல்லு அர்ஜுன்! சட்ட நடவடிக்கை பாயும்! வழக்கறிஞர்
ஹைதராபாத்: அல்லு அர்ஜுனை ஜாமீனில் விடுவிக்குமாறு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் ஆணை கிடைத்த பிறகும் அவரை விடுவிக்காமல் இருந்த சிறை நிர்வாகத்திற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் அசோக் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை செஞ்சல்குடா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். நேற்றே அவருக்கு ஜாமீன் கிடைத்த போதிலும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ஆவணங்கள் சிறை நிர்வாகத்திற்கு கிடைக்க தாமதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவர் ஒரு இரவை சிறையில் கழிக்க நேரிட்டது. இதையடுத்து இன்று காலை அல்லு அர்ஜுன் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அவரை காண சிறை வாயில் அருகே ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் பின்வாசல் வழியாக அழைத்து செல்லப்பட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் அவரது விடுதலை குறித்து வழக்கறிஞர் அசோக் ரெட்டி கூறியிருப்பதாவது: செஞ்சல்குடா சிறை நிர்வாகத்திற்கு நேற்று இரவே தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் காப்பி கிடைத்துவிட்டது. எனினும் அல்லு அர்ஜுனை சிறையில் இருந்து விடுவிக்கவில்லை. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதம். இதற்காக சிறை நிர்வாகத்தின் மீது சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும். தற்போது அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். இவ்வாறு அசோக் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஸ்டைலிஷ் ஸ்டார் நடித்த புஷ்பா 2 படம் வெளியானது. இந்த படத்தின் ப்ரீமியம் ஷோ சந்தியா தியேட்டரில் போடப்பட்டது. இந்த படத்தை காண ரேவதி, தனது கணவர் பாஸ்கர், அவர்களது இரு மகன்களுடன் வந்திருந்தார்.
அப்போது திடீரென அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு சர்பிரைஸ் விசிட் அடித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் திடீரென அவரை காண முண்டியடித்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதியும் அவரது மகனும் சிக்கி மயங்கினர்.
உடனடியாக அங்கிருந்த போலீஸார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ரேவதியின் உயிரை காப்பாற்றமுடியவில்லை. மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரசிகையின் உயிரிழப்பு குறித்து அறிந்த அல்லு அர்ஜுன், அவருடைய இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், அந்த குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் கேட்ட போது, சட்டத்தின் முன் பெரியவர், சிறியவர் என்றெல்லாம் கிடையாது. அனைவரும் சமம்.
ஏன் இதற்கு முன்னர் சல்மான் கான், சஞ்சய் தத் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அல்லு அர்ஜுன் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு ரூ. 50 ஆயிரம் செலுத்தி தனி நபர் ஜாமீன் கிடைத்தது. ஆனால் அந்த ஆணைகள் சிறை நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை என்பதால் அல்லு அர்ஜுன் சிறையிலேயே நேற்று இரவு பொழுதை கழிக்க நேரிட்டது. இதையடுத்து ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications