ட்விஸ்ட்டு! ஜெகன் மோகன் கட்சியில் இருந்து விலகிய வேகத்தில் பவன் கல்யாணை சந்தித்த அம்பத்தி ராயுடு!
ஹைதராபாத்: ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சேர்ந்துவிட்டு அடுத்த 9 நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, இன்று ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணை சந்தித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக முன்பு கூறியிருந்தார் அம்பத்தி ராயுடு. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியில் சி.எஸ்.கே கோப்பை வென்றதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அம்பத்தி ராயுடு, ஆந்திர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், அவர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவின.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி திருப்பதி ராயுடு, கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அம்பத்தி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடக்கூடும் எனக் கூறப்பட்டது.
— ATR (@RayuduAmbati) January 10, 2024
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 9 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அம்பத்தி ராயுடு. அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாகவும் அம்பத்தி ராயுடு அறிவித்தார். அம்பத்தி ராயுடுவின் திடீர் விலகலுக்கு என்ன காரணம், வேறு கட்சியில் இணையப்போகிறாரா என பரபர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
துபாயில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதால் அரசியல் சார்பு இருக்கக் கூடாது என்பதற்காக கட்சியிலிருந்து விலகியதாக அம்பத்தி ராயுடு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று திடீரென ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யானை சந்தித்துள்ளார் அம்பத்தி ராயுடு.
ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணை நேரில் சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்களை அம்பத்தி ராயுடு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திர பிரதேச மக்களுக்கு அரசியல் மூலம் பணியாற்றுவதற்காக முழுமனதுடன் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தேன். ஆனால் அங்கு என்னுடைய இலக்குகளை எட்ட முடியாது என்பதை புரிந்து கொண்டதால் கட்சியிலிருந்து விலகி இருக்கிறேன். யார் மீதும் நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை.
என்னுடைய கருத்துகளும் அவர்களுடைய கருத்துக்களும் ஒரே புள்ளியில் இணையவில்லை. இருப்பினும் எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் பவன் கல்யாணை நேரில் சந்திக்குமாறு ஆலோசனை கூறினர். இதையடுத்து பவன் கல்யாணை நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையிலும், அரசியல் குறித்தும் நீண்ட நேரம் ஆலோசித்தேன். அவருடைய கொள்கைகளும், கருத்துகளும் என்னுடைய கருத்துகளோடு ஒத்துப் போவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
விரைவில் துபாய்க்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக கிளம்ப உள்ளேன். எப்போதும் ஆந்திர மக்களுக்காக உடன் நிற்பேன்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, அம்பத்தி ராயுடு, ஜனசேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், அம்பத்தி ராயுடு இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications