ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு!
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்துக்கு 3 தலைநகர் அமைக்கப்படும் என்ற முடிவை கைவிடுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவின் தலைநகராக அமராவதி நகர் உருவாக்கப்படும் என அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
வளிமண்டல மேலடுக்குச்சுழற்சியால் 5 நாட்களுக்கு கனமழை - நவ.25,26 அடி வெளுக்கப்போகுது
இதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 34,000 ஏக்கர் நிலத்தையும் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆந்திராவுக்கான புதிய தலைநகராக அமராவதி நகரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் 2019 ஆந்திரா தேர்தலில் வெற்றி பெற்றார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்
அவர் முதல்வரான உடனேயே ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருக்கும்; நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், சட்டசபைத் தலைநகராக அமராவதி, நீதித்துறை தலைநகராக கர்நூல் செயல்படும் என அறிவித்தார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
100க்கும் மேற்பட்டோர் வழக்கு
இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதற்கு எதிராக 100க்கும் மேற்பட்டோர் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மத்திய அரசும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசோ, இது முழுவதும் மாநில அரசுடன் தொடர்புடையது. மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றது.
வழக்கு விசாரணை
இதனிடையே அண்மையில் மூன்று தலைநகர விவகாரம் தொடர்பாக திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று நீதிபதி பி.கே.மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக 3 தலைநகரங்களை எதிர்க்கும் வழக்கின் விசாரணை நடைபெற்றது.
3 தலைநகரங்கள் வாபஸ்
இந்த விசாரணையின் போது அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம், 3 தலைநகரங்கள் தொடர்பான சட்டங்களை திரும்பப் பெறுவது என அரசு முடிவெடுத்துள்ளது; இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பார் என்றார். இதனைத் தொடர்ந்து அட்வகேட் ஜெனரல் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர் மாநில அமைச்சரவை அவசரமாக கூடி 3 தலைநகரங்கள் தொடர்பான சட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.