எல்லாம் சரி! ஹிஜாப் அணிந்த பெண் எப்போது மஜ்லீஸ் கட்சியின் தலைவராவார்.. ஓவைசிக்கு பாஜக நறுக் கேள்வி
ஹைதராபாத்: ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் என அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ள நிலையில், அதே ஹிஜாப் அணிந்த பெண் எப்போது ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலுக்காக அங்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசுகையில், இந்தியரான ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ளார். அது போல் ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் நம் நாட்டின் பிரதமராக வருவார் என நம்புகிறேன்.
மதசார்பின்மையை ஒழிக்க பாஜக விரும்புகிறது. நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தார். அசாதுதீன் ஓவைசியின் கருத்துக்கு பாஜக உரிய பதிலடி கொடுத்துள்ளது. பாஜகவின் ஷெஹ்சாத் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவைசி பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என ஓவைசி நம்புகிறார். அரசியலமைப்பு சட்டம் யாரையும் தடை செய்யவில்லை. ஆனால் ஹிஜாப் அணிந்த பெண் எப்போது ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராவார் என சொல்லுங்கள். அதிலிருந்து தொடங்கலாமா என பூனவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் ஹிஜாப் அணிந்த பிரதமர் பதவியேற்பார்! கர்நாடகாவில் பேசிய ஓவைசி.. பாஜக பதில் என்ன தெரியுமா?