"இந்தியா இந்து ராஷ்டிரமாக மாறும்!" யாத்திரையில் பாடிய பாஜக எம்எல்ஏ.. வேறு என்ன சொன்னார் தெரியுமா
ஹைதராபாத்: பாஜக எம்எல்ஏ ஒருவர் ராம நவமி யாத்திரையில் பாடிய பாடல் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ராம நவமி யாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ராம நவமி யாத்திரையில் கலந்து கொண்ட டி ராஜா சிங் பாஜகவைப் புகழும் வகையிலும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழும் வகையிலும் பாடலை பாடினார்.

பாஜக எம்எல்ஏ
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசரைப் பயன்படுத்தி மதுராவை சுத்தம் செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டார். அதாவது அயோத்திக்கு பின்னர், மதுரா மற்றும் காசியையும் யோகி ஆதித்யநாத் புல்டோசரைப் பயன்படுத்தி சுத்தம் செய்தார். மேலும், பாரதம் விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறும் என்று வரிகளும் அந்த பாடலில் இடம் பெற்று இருந்தது. மேலும், ராமரின் பெயரைச் சொல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்ச்சை
ஐதராபாத்தில் வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த நவமி விழாவில், பழைய ஹைதராபாத் பகுதியில் நிறைவடைந்தது. நவமி பேரணியில் ராமரை வணங்காதவர்கள் வெளியேற வேண்டும் என்றும் பாரதம் விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறும் என்றும் பாஜக எம்எல்ஏ ஒருவர் பாடியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதற்கு இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஓவைசி
இதற்கிடையில், ஹைதராபாத் எம்பியும் மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹைதராபாத் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்ற சில சம்பவங்களைப் பட்டியலிட்ட ஓவைசி, நாட்டில் வலதுசாரிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாகச் சாடியுள்ளார்.

தாக்கு
இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில நாட்களில் போலீசாரின் ஆதரவுடன் இந்துத்துவா அமைப்பினர் குறைந்தபட்சம் இந்த இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 1 கரௌலி, ராஜஸ்தான். 2. கம்பாடா & ஹிம்மத்நகர், குஜராத் (சமாதி எரிக்கப்பட்ட சம்பவம்) 3. கார்கோன், மத்தியப் பிரதேசம் 4. கர்நாடகாவில் குல்பர்கா, ராய்ச்சூர், கோலார், தார்வாட் 5. வைஷாலி & முசாபர்பூர், பீகார் 6. சீதாபூர், உத்தரப்பிரதேசம் 7. இஸ்லாம்புரா, கோவா இடங்களில் வன்முறை நடந்துள்ளது.

இனப்படுகொலை
இது தவிர நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் பாலியல் வன்புணர்வு குறித்து அழைப்பு விடுக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன" என்று பதிவிட்டுள்ளார். மேலும், பல இடங்களில் ராம நவமி யாத்திரைகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் பேசப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.












Click it and Unblock the Notifications