கேடிஆர் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில்? பிஆர்எஸ் குற்றச்சாட்டு! தெலுங்கானா அரசியலில் பரபர!
ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரீய சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராம ராவ் போலீசாரால் இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பி.ஆர்.எஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், ஹரிஸ் ராவ், ஆர்எஸ் பிரவீன் குமார் உள்ளிட்ட கட்சியின் 7 உயர்மட்டத் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கேடி.ராமராவ் மீது ஊழல் புகார் எழுந்தது. தெலங்கானாவில் கடந்த கேசிஆர் ஆட்சியின் போது ஹைதராபாத்தில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்துவதற்காக, கேடிஆர் அனுமதி இன்றி ரூ.55 கோடி பணத்தை வெளிநாட்டு நாணயங்களில் செலுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, கேடிஆர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.
பார்முலா-இ பந்தயம் தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு, தனக்கு எதிராக சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த கேடிஆர், இது அற்பத்தனமானது, சட்ட செயல்முறைகளை துஷ்பிரயோகம் செய்வது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் முன்பாக விசாரணைக்கு ஆஜராகினார் கேடிஆர். அதன் பிறகு பேசிய அவர், இந்த வழக்கினை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லாத நிலையில், என்னிடம் ஏழு மணி நேரம் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டனர் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
என் மீதான குற்றச்சாட்டில் ஊழல் எங்கே இருக்கிறது? ஹெச்எம்டிஏவுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு உள்ளது. அந்தக் கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது நேர்மையான கணக்கு. ஒரு அமைச்சராக, ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவை உலக அரங்கில் இடம்பெறச் செய்வதற்காக மனசாட்சியுடன் செயல்பட்டுள்ளேன். அதற்காக நீங்கள் என் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்வீர்கள் என்றால், அது முதல்வரின் கொடூரமான மனநிலையே தவிர வேறொன்றுமில்லை.
அவர்கள் என் மீது சட்டவிரோதமாக வழக்கு தொடரப் பார்க்கிறார்கள். இது, அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் எந்த ஒரு குரலையும் ஒடுக்கும் முயற்சி. நான் சட்டப்பூர்வமாக போராடுவேன். நீதி வெல்லும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிஆர்எஸ் செயல் தலைவர் கேடிஆர் உள்ளிட்ட தலைவர்கள் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பி.ஆர்.எஸ் கட்சி தெரிவித்துள்ளது. கே.டி.ராமராவ், ஹரீஷ் ராவ், ஆர்.எஸ். பிரவீன்குமார் உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள கேடிஆர் இல்லத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக, பிஆர்எஸ் எம்எல்ஏ பாடி கவுஷிக் ரெட்டி நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications