விரைவில் தேர்தல்! தெலங்கானாவில் ஆட்சியை இழக்கும் சந்திரசேகர் ராவ்? அப்போ காங்கிரஸ்-பாஜக? பரபர சர்வே
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதுதொடர்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. இதில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது எனவும், காங்கிரஸ், பாஜக கட்சிகள் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்தது. 2014 முதல் தெலங்கானா தனி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தனிமாநில கோரிக்கையை முன்வைத்து வெற்றியும் பெற்ற சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி வெற்றி பெற்றது.

இதையடுத்து சந்திரசேகர் ராவ் முதல்வரானார். அதன்பிறகு ஆட்சிக்காலம் முடியும் முன்பே சட்டசபையை கலைத்து 2018ல் சந்திரசேகரராவ் தேர்தலை எதிர்கொண்டார். இதிலும் அவரது கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து 2வது முறையாக சந்திரசேகர் ராவ் முதல்வரானார்.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் கடந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி(இப்போது பாரத் ராஷ்ட்ர சமிதி) 103 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் அமோக வெற்றி பெற்று சந்திரசேகர் ராவ் 2வது முறையாக முதல்வர் ஆனார்.
இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய உள்ளது. இதன்மூலம் இன்னும் சில மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து அங்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. இதற்கிடையே தான் Small Box India சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஏஐஎம்ஐஎம் என எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டசபை தான் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கனாவை பொறுத்தமட்டில் தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த மேஜிக் நம்பரை எந்த கட்சியும் தொடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடைபெற உள்ள தேர்தலில் சந்திரசேகர ராவின் கட்சி 48 முதல் 50 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் 28 முதல் 35 தொகுதிகளிலும், பாஜக 15 முதல் 25 தொகுதிகளிலும் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 6 முதல் 7 இடங்களிலும் மற்றவர்கள் 4 முதல் 6 இடங்களிலும் ஜெயிப்பார்கள். இதன்மூலம் தொங்கு சட்டசபை தான் அமையும் என அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்தலில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 38 சதவீதம், காங்கிரஸ் 32 சதவீதம், பாஜக, 24 சதவீதம், ஏஐஎம்ஐஎம் 2 சதவீதம், மற்றவர்கள் 4 சதவீதம் வரை ஓட்டுகளை பெற வாய்ப்புள்ளது என ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications