தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ்- நாளை பதவியேற்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானா முதல்வராக நாளை (டிசம்பர் 7) ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.
தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.

தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி தேர்வாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தெலுங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களான பட்டி விக்ரமார்க்க மல்லு, உத்தம் குமார் ரெட்டி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் குதித்தனர். இதனால் தெலுங்கானா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் யார் என்கிற விவகாரம் டெல்லிக்குப் போனது. தெலுங்கானா காங்கிரஸ் விவகாரங்களுக்கான சிறப்பு பொறுப்பாளர் டிகே சிவகுமார் டெல்லி விரைந்து சென்று யாருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு? யாரை முதல்வராக தேர்வு செய்வது? என்பது தொடர்பாக மேலிடத்துடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் டிகே சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் மேலிடம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ரேவந்த் ரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி டிசம்பர் 7-ந் தேதி (நாளை) பதவியேற்க உள்ளார் என்றார்.
#WATCH | Congress General Secretary KC Venugopal says, "Congress President has decided to go with Revanth Reddy as the new CLP of Telangana Legislative Party."
— ANI (@ANI) December 5, 2023
Swearing-in ceremony of new Telangana CM to be held on December 7. pic.twitter.com/4bkAGMjTmg












Click it and Unblock the Notifications