தெலுங்கானா: பிஆர்எஸ் கட்சிக்கு எண்ட் கார்டு! வெற்றிக்கொடி நாட்டும் காங்.. இந்தியா டுடே எக்ஸிட் போல்
ஐதராபாத்: தெலங்கானாவில் தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த சந்திரசேகராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி இந்த முறை காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றும், 63 முதல் 73 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவானது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. தெலங்கானாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 2 முறை பெற்ற வெற்றியுடன் 3வது முறையாக தேர்தலை சந்தித்து இருக்கிறது பிஆர்எஸ்.
இந்த தேர்தலில் தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ்-பிஆர்எஸ் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானா தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், தொடர்ந்து 2 முறையாக ஆட்சியில் இருக்கும் கேசிஆரின் பிஆர்எஸ் ஆட்சி காலியாகும் என்றும் கணித்துள்ளது.
இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 63 முதல் 73 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம் என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறாக தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி 34 முதல் 44 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியிடம் பிஆர்எஸ் 10 ஆண்டு ஆட்சியை பறிகொடுத்து ஹாட்ரிக் சாதனை படைக்காமல் அதிகாரத்தை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாஜக 4 முதல் 8 தொகுதிகளிலும், ஓவைசி கட்சி 6 முதல் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் முதலே தெலங்கானாவில் பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என கூறப்பட்டு வந்தது. அதனை இந்த கருத்து கணிப்பு பிரதிபலித்துள்ளது.
தெலுங்கானா சட்டசபை தொகுதிகள் - 119
பெரும்பாண்மை - 60
காங்கிரஸ் - 63 - 73
பிஆர்எஸ் - 34 - 44
பாஜக - 4 - 8
ஏஐஎம்ஐஎம் - 5 - 7
மற்றவை - 0 - 1












Click it and Unblock the Notifications