மளமளவென பற்றி எரிந்த தீ.. அலறிய உயிர்கள்.. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 5 பேர் உடல் மீட்பு!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நம்பள்ளியில் பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு வயதான பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். கீழ் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரியக்கூடிய பொருட்கள் காரணமாக தீ விரைவாகப் பரவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு தீ பிடித்த நிலையில் கடும் புகை மூட்டம் காரணமாக இன்று காலையில் தான் உடல்கள் மீட்கப்பட்டன.
தெலுங்கானா மாநிலம் நம்பள்ளி மாவட்டத்தில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் சிக்கி கொண்டனர். இந்த தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்க முயன்றனர். எனினும், இரவு நேரத்தில் தீயை அணைக்க கடுமையாக போராட வேண்டியிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 9.15 மணியளவில் தீ விபத்தில் பலியான ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில், 5 பேர் பலியானதாகவும், எரியக்கூடிய பொருட்கள் அதிக அளவில் இருந்ததால், தீ வேகமாகப் பரவியது என்றும் தெலுங்கானா தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவின் இயக்குநர் ஜெனரல் விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் கட்டிடக் காவலாளி யாதையாவின் மகன்கள் பிரணித் (11), அகில் (8), பர்னிச்சர் கடையில் பணிபுரிந்த ஆட்டோ ஓட்டுநர் ஹபீப் (35), கடையில் விற்பனையாளராகப் பணியாற்றிய முகமது இம்தியாஸ் (28) மற்றும் அந்த கட்டிடத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய பெபி பேகம் (46) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டிடக் காவலாளியின் மகன்கள் பிரணித், அகில் ஆகியோர், கீழ்த்தளத்தில் இருந்த அறையில் சிக்கிக்கொண்டனர், அப்போது தீ விபத்து ஏற்பட்டு வேகமாகப் பரவியது. சம்பவம் நடந்த நேரத்தில் அவர்களின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் குழந்தைகள் தீயில் சிக்கி பலியாகியுள்ளனர். பெபி பேகமும் பாதாள அறையில் இருந்ததால் தீயில் சிக்கி பலியானார்.
மூன்று பேர் கீழ் தளத்தில் சிக்கியிருப்பதை அறிந்ததும், ஹபீப், இம்தியாஸ் ஆகியோர் அவர்களை மீட்க உள்ளே சென்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களும் தீயில் சிக்கிக்கொண்டனர், வெளியே வர முடியவில்லை. அடர்ந்த புகை மூட்டம் ஏற்பட்ட நிலையில், ஐந்து பேரும் மூச்சுத் திணறி இறந்துள்ளனர்.
தெலுங்கானாவில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி கிடைக்க வழி செய்யப்படும் என அம்மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், பலியான 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தெலுங்கானா அரசு.












Click it and Unblock the Notifications