கலங்கிப்போன அல்லு அர்ஜூன்.. வெள்ளத்தில் மூழ்கிய ஆந்திரா - தெலுங்கானாவுக்கு நிதி உதவி.. தாராளம்
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைத்து கவலையில் கலங்கிய நடிகர் அல்லு அர்ஜூன் இரு மாநிலங்களுக்கும் சேர்த்தும் ரூ.1 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழையால் நிலச்சரிவு என்பது ஜூலை மாதம் இறுதியில் நடந்தது. இதில் 250க்கும் அதிகமானவர்கள் இறந்த நிலையில் ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கிருஷ்ணா, குண்டூர், என்டிஆர் ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவை எடுத்து கொண்டால் மழை வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 15 ஆயிரத்து 171 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்னர். இவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 163 தங்கும் முகாம்கள், 197 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கானாவிலும் மெகபூபாபாத் உள்பட பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கபப்ட்டுள்ளன.
தற்போது இரு மாநிலங்களிலும் மீட்பு பணிகள் என்பது தீவிரமாக நடந்து வருகிறது. மழை வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வான் வழியாக வழங்கப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானாவுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் ரூ..1 கோடி நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மக்கள் பட்ட துன்பத்தை நினைத்து நான் வருத்தமடைகிறேன். இந்த சவாலான நேரத்தில் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக இருமாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை வழங்க உள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications