தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா வயது முதிர்வினால் இன்று காலமானார் அவருக்கு வயது 88. உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார்.அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள விம்மூர் கிராமத்தில் 1933ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.ரோசய்யா, வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காரராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.
ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரோசய்யா, கடந்த 1968ஆம் ஆண்டு முதல் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1978,1983ஆம் ஆண்டுகளில் சட்டசபை எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருந்த போது அமைச்சரவையில் சாலை, கட்டிட வசதி அமைச்சர், போக்குவரத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், கைத்தறித்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் சுகாதாரர்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
நேரு முதல் பல பிரதமர்களுடன் நெருங்கிப் பழகிய தலைவர் ரோசய்யா. பல காலம் அமைச்சர் பதவியில் இருந்து சாதனை படைத்தவர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் நிதியமைச்சராக 16 முறை இவர் இருந்துள்ளார். 16 பட்ஜெட் போட்டுள்ளார். அதிலும் 7 பட்ஜெட்டை தொடர்ந்து போட்டுள்ள சாதனையாளர். இது இந்திய அளவில் ஒரு சாதனையாகும்.
ஒரு கவர்னரோட மனசு இன்னொரு கவர்னருக்குத்தான் தெரியும்.. ரோசய்யா சொல்வதைப் பாருங்க!
ஆந்திரா மாநில முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி விபத்தில் மரணமடைந்த பின்னர் கடந்த 2009 முதல் 2010ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார். ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார் ரோசய்யா. ஹைதரபாத்தில் ஓய்வெடுத்து வந்த ரோசய்யாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
ரோசய்யாவிற்கு 88 வயதாகிறது அவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ரோசய்யா மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்
ரோசய்யாவின் மறைவுக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழகத்தின் முன்னாள் ஆளுநராகவும், ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் மிகச் சிறப்பாக செயலாற்றிய திரு. ரோசய்யா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிக உயரிய பதவியில் இருந்தாலும் மக்கள் மிக எளிதாக அணுகக்கூடிய தலைவராக திகழ்ந்தவர், அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து தென்னிந்திய அரசியலில் பயணித்தவர்,ஆந்திராவில் மிக அதிகமான நாட்கள் அமைச்சராக பதவி வகித்து சரித்திர சாதனை புரிந்தவர். அவரது இழப்பு மக்களுக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.