‛தலையே சுத்திடுச்சு’’.. குடியரசு தினவிழாவில் மயங்கி விழுந்த தெலுங்கானா மாஜி துணை முதல்வர்! பரபரப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் துணை முதல்வர் மகமத் அலி திடீரென்று மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் இன்று காலையில் ஆளுநர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி தேசியக் கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர்.
அதேபோல் தெலுங்கானாவிலும் இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தெலுங்கானா பவனில் நடந்த விழாவில் முன்னாள் துணை முதல்வர் மகமத் அலி பங்கேற்றார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தூக்கினர். ஆனால் அவரால் எழுந்து நிற்க முடியவில்லை.
இதையடுத்து மகமத் அலியை கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கைத்தாங்கலாக தூக்கி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகமத் அலி தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர். முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவுக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் தான் இவருக்கு சந்திரசேகரராவ் துணை முதல்வர் பொறுப்பு கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications