பாஜகவுடன் கூட்டணியா? வெறிநாயா கடிச்சிருக்கு? 110 இடத்தில் டெபாசிட் நஹி: மோடிக்கு கேசிஆர் மகன் பதிலடி
ஹைதராபாத்: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கு நாங்கள் ஒன்றும் பைத்தியம் அல்ல என்று பிரதமர் மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகன் கே.டி. ராமா ராவ் பதிலடி தந்துள்ளார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களில் இன்று 2-வது நாளாக அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தெலுங்கானா முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான கே.சந்திரசேகர ராவை கடுமையாக சாடினார்.

பிரதமர் மோடி விமர்சனம்: மேலும், கடந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பாஜகவின் ஆதரவு தேவையானதாக இருந்தது. முன்பு என்னை விமான நிலையத்தில் வந்து வரவேற்பார். தற்போது அதனை நிறுத்திவிட்டார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பின்னர் டெல்லி வந்த கேசிஆர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புகிறோம் என்றார். ஆனால் அவருடைய செயல்பாடுகளுடன் நம்மால் இணைந்து செயல்பட முடியாது என தெரிவித்துவிட்டேன் எனவும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
கேடி ராமராவ் பதிலடி: பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகனும் மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவ் பதிலடி தந்துள்ளார். இது தொடர்பாக கே.டி.ராமா ராவ் கூறியதாவது: பிரதமர் மோடி முரண்பாடாக தொடர்ந்து பேசுகிறார். கர்நாடகா மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸுக்கு பிஆர்எஸ் கட்சி நிதி உதவி செய்தது; அதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்கவிலை என்றார்.
வெறிநாயா கடிச்சிருக்கு?: எங்களை என்ன வெறிநாயா கடித்துவிட்டது? நாங்கள் போய் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கு? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதான் பல கட்சிகள் வெளியேறிவிட்டன. சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்குதேசம், சிரோமணி அகாலி தளம் ஆகியவை பாஜக தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டன.
இவகதான் உங்க கூட்டணி: இப்போது பாஜகவுடன் யார்தான் இருக்கிறார்கள்? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இப்போது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறைதான் இருக்கிறது.. வேறு எந்த கட்சியும் இல்லை.
என்னை முதல்வராக உங்க அனுமதி எதுக்கு?: என்னை முதல்வராக நியமிக்க முதல்வர் கேசிஆர் உங்களிடம் அனுமதி கேட்டதாக சொல்கிறீர்களே. எங்க கட்சி விவகாரத்தில் நாங்க முடிவெடுக்க உங்க அனுமதி எதுக்கு எங்களுக்கு தேவை? பிரதமர் மோடி கதை வசன எழுதுவதில் கைதேர்ந்தவர்; ஆஸ்கர் விருது பெற முயற்சிக்கலாம்.

அமித்ஷா மகன்: பிரதமர் மோடிக்கு செலக்டிவ் அம்னீசியா பாதிப்பு போல.. வாரிசு அரசியலை பற்றி எல்லாம் பேசுகிறார். ஆனால் வசதியாக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருப்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.
110 தொகுதிகளில் டெபாசிட் காலி: பாஜககவினரை தெலுங்கானாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகளைப் போல உங்களை வரவேற்கிறோம். போன தேர்தலில் பாஜக 105 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. இந்த முறை 110 தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காது. ஒரே ஒரு எம்பி சீட்டைக் கூட தெலுங்கானாவில் இருந்து பாஜகவால் பெற முடியாது. தெலு9ங்கானா முதல்வர் கேசிஆர் ஒரு போராளி.. ஆனால் பிரதமர் மோடியோ ஒரு பொய்யர். இவ்வாறு கேடி ராமாராவ் கூறினார்.












Click it and Unblock the Notifications