"கிட்னி" விற்க போய் ரூ 16 லட்சம் ஏமாந்த மாணவி.. உண்மை தாங்க! எப்படினு பாருங்க! வாயடைத்துப்போன அப்பா
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தில் கடனை அடைக்க கிட்னியை விற்கச் சென்ற பெண் 16 லட்ச ரூபாய் ஏமாந்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
நவீன உலகில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் நன்கு படித்தவர்களும் கூட ஈஸியாக ஏமாறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றாலும் கூட அது பெரியளவில் பலன் அளிப்பதாக இல்லை.
சைபர் ஸ்பேஸில் புது புது வழிகளில் சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து பணத்தைப் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் கடனை அடைக்க உடல் உறுப்புகளைக் கூட விற்கத் தயாராக இருந்த பெண் பல லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

சைபர் குற்றம்
சமீப காலங்களில் அரங்கேறிய மிக வினோதமான ஒரு சைபர் மோசடியாக இது பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு இருக்கும் கடனை அடைக்கத் தனது சிறுநீரகத்தை விற்க முயன்றுள்ளார். அப்போது உள்ளே புகுந்த மோசடி பேர்வழிகள் அவரிடம் இருந்தே ரூ.16 லட்சத்தைக் கறந்துள்ளனர். அந்த பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் செவிலியர் படிப்பைப் படித்து வந்த மாணவி என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்த ரூ.2 லட்சத்தை அடைக்க முயன்ற போது தான் இதில் அவர் சிக்கியுள்ளார்.

கிட்னி விற்க முடிவு
அந்த மாணவி ஆந்திராவின் குண்டூரை சேர்ந்தவர். அவர் தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 2 லட்சத்தை எடுத்துள்ளார். அவருக்குத் தெரியும் முன்பு மீண்டும் ரூ 2 லட்சத்தைப் போட வேண்டும் என அவர் யோசித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு வருமானம் எதுவும் இல்லை என்பதால் கடைசியில் கிட்னியை விற்கும் முடிவுக்கு வந்துள்ளார். தனது சிறுநீரகத்தை ரூ.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக அப்பெண் ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார். இதை நோட் செய்த சைபர் குற்றவாளிகளை அவர் தொடர்பு கொண்டுள்ளனர்.

3 கோடி தரோம்
கிட்னிக்கு 3 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தான் ரூ 2 லட்சத்திற்கு கிட்னியை விற்கத் தயார் என அறிவித்த போதிலும், இவர்கள் 3 கோடி ரூபாய் தருவதாகச் சொன்னதால் அந்த மாணவி குஷியாகிவிட்டார். அந்த சைபர் மோசக்காரர்களின் வலையில் அந்த சிறுமி விழுந்துவிட்டார். பிரவீன் ராஜ் என்ற நபர் அவரை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். மேலும், சிறுநீர் அகற்ற அறுவை சிகிச்சைக்கு முன்பே 50% பணத்தை டெபாசிட் செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

16 லட்சம் மோசடி
இருந்த போதிலும் வரி மற்றும் போலீஸ் சரிபார்ப்பு உள்ளிட்ட செலவுக்காக ரூ.16 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போதும் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை வரவில்லை. இதையடுத்து அந்த பெண்ணை நம்ப வைக்க, பிரபல தனியார் வங்கியில் கணக்கு தொடங்கிய ஹேக்கர்கள் அந்தக் கணக்கிற்கு 3 கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இது தொடர்பான தகவல்களை அந்தப் பெண்ணுக்குப் பகிர்ந்து, ரூ 16 லட்சத்தைச் செலுத்திய உடன் முதலில் 50% தொகையும் அடுத்த ஆப்ரேஷனுக்கு பிறகு அடுத்த 50% தொகையும் செலுத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.

போலி முகவரி
அந்த வங்கிக் கணக்கில் ரூ. 3 கோடி இருப்பதைப் பார்த்த உடன் அந்தப் பெண் நம்பிவிட்டார். ரூ 16 லட்சத்தைத் தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பிய அந்த பெண், 50 சதவீத முன்பணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சைபர் குற்றவாளிகள் டெல்லி முகவரியைத் தந்து, அங்குச் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் இதை நம்பி தனியாக டெல்லி வரை சென்றுள்ளார். அங்குச் சென்ற பின்னரே அந்த முகவரி போலியானது என்பதும் தெரிய வந்துள்ளது.

தந்தை அதிர்ச்சி
இதன் பின்னரும் அந்த சிறுமி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவிக்கவில்லை. தனது வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்ச ரூபாய் பறிபோனதைப் பார்த்துப் பதறிய அவரது தந்தை மகளிடம் பேசியுள்ளார். மேலும், எந்த பிரச்சினையா இருந்தாலும் வீட்டிற்கு வா பேசிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், தந்தைக்குப் பயந்து ஹைரதாபாத்தில் விடுதியில் வசித்த அந்த பெண் யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி அவரை தோழியின் வீட்டில் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பின்னரே தந்தையின் ஆலோசனைப்படி அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications