"புதையல் ஆசை.." மூன்றே ஆண்டுகளில் 11 பேரை கொன்ற சீரியல் கில்லர்.. சிக்கியது எப்படி! பகீர் பின்னணி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 47 வயதான சாதாரண நபர் ஒருவர் வெறும் நான்கு ஆண்டுகளில் 11 பேரைக் கொன்றுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநில போலீசார் சமீபத்தில் ரமதி சத்திய நாராயணா என்பவரைக் கைது செய்தனர். இந்த ரமதி சத்திய நாராயணா பார்க்கச் சராசரியான ஆளாகத் தெரிந்தாலும் அவருக்கு பல்வேறு முகங்கள் இருக்கிறது.

அவரது குடும்பத்தினரைப் பொறுத்தவரை அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கணவர் மற்றும் தந்தை. தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மற்றும் வனபர்த்தி மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் துறையில் அவர் ஒரு புரோக்கராக இருந்தார்.
கொடூர கொலை: இதுபோல அவருக்கு இன்னும் சில முகங்களும் இருந்தது. சிலர் அவரை மூலிகைகளைத் தேடி அழையும் மருத்துவராகவும் சிலர் அவரை புதையல் வேட்டையாடும் நபராகவும் பார்த்துள்ளனர். ஆனால், நாகர்கர்னூல் மாவட்ட போலீசார் தான் 47 வயதான இவருக்கு ஒரு சீரியல் கில்லர் முகம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இவர் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மூன்று மாநிலங்களில் 11 பேரைக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கோவுலா வெங்கடேஷ் என்ற நபரின் கொலை வழக்கில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இவர் முதலில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து அவிழ தொடங்கிய மர்ம முடிச்சுகள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த ரமதி சத்திய நாராயணா எவ்வளவு கொடூரமானவர் என்பதை அப்போது போலீசார் உணரவில்லை. கடந்த 2020 முதல் அவர் பல கொலைகளைச் செய்துள்ளது தெரிய வந்தது.
போலீசார் சொல்வது என்ன: இது குறித்து போலீசார் கூறுகையில், "சத்தியநாராயணாவை முதலில் பார்க்கும் நபர்கள் யாரும் அவர் இந்த கொடூரத்தைச் செய்யக் கூடியவர் எனச் சொல்ல மாட்டார்கள். அவர் ஒரு சாதாரண குடும்பத் தலைவனைப் போலவே இருந்தார். ஆனால், அவர் செய்த காரியங்கள் கொடூரமானது. முகத்தில் ஆசிட் ஊற்றியும், அவர்களின் மண்டை ஓடுகளில் கல்லைத் தூக்கிப் போட்டும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்" என்றார்.
குறுகிய காலத்தில் இத்தனை கொலைகளை அவர் எப்படிச் செய்தார்.. சட்டத்தில் இருந்து இத்தனை காலம் எப்படித் தப்பித்தார் என்பதே பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. போலீஸ் நடத்திய விசாரணையில் பல ஷாக் தகவல்கள் வெளியாகினர். அதாவது அவர் கொலை செய்யும் நபர்களிடம் அவர்களுக்குப் பிடித்த விவகாரங்கள் குறித்தே பேசுவாராம். ரியல் எஸ்டேட், அமானுஷ்ய விஷயம், புதையல்கள், மூலிகை வைத்தியம் எனப் பல விஷயம் குறித்துப் பேசுவாராம். அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இவரது பேச்சு இருக்கும்.
அப்பாவி ஆண்கள்: இந்த நம்பிக்கை காரணமாகவே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் நள்ளிரவில் கூட சத்திய நாராயணா அழைப்பை ஏற்று அந்த அப்பாவி இளைஞர்கள் அங்கே சென்றுள்ளனர்.
சத்தியநாராயணனின் முதலில் கொலை செய்தவர் காஜா பாஷா.. இவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர்.. புதையலை எடுக்கலாம் எனச் சொல்லி அவரை ஏமாற்றிக் கூட்டிச் சென்றுள்ளார். அங்கே ஏதோ ஒரு சடங்கைச் செய்வது போலச் செய்து அவரை கொலை செய்துள்ளார். நிதி நெருக்கடியால் காஜா பாஷா தற்கொலை செய்து கொண்டதாகவே முதலில் பலரும் நினைத்துள்ளனர்.
கொலை செய்தது எப்படி: காஜா பாஷாவுக்கு புதையல் மீது ஆர்வம் இருந்த நிலை, அதை வைத்தே அவர் ஏமாற்றிக் கொன்றுள்ளார். இப்படி ஒவ்வொருவருக்கும் எதில் ஆர்வம் என்பதைத் தெஎமரிந்து அதை வைத்தே அவர்களைக் கொலை செய்துள்ளார். பொதுவாகச் சடங்கு என அழைத்துச் சென்று அவர்களைக் கண்களை மூடி உட்கார வைத்துவிடுவாராம்.. பிறகு தெய்வத்தின் பிரசாதம் எனக் கூறி விஷம் கலந்த பாலை கொடுத்துள்ளார்.
வாயைத் திறந்து எதாவது சொன்னால் புதையலைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் சொல்லிவிடுவார் என்பதால் அவர்களும் அதை நம்பி அமைதியாகவே இருந்துள்ளனர். இவர் ஏற்கனவே ஒருமுறை வஸ்ரலா லிங்கசாமி என்ற விவசாயி கொலை வழக்கில் கைதானார். இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் அப்போது அவரை விடுவித்துவிட்டனர்.
இவர் கொலை செய்த மற்றவர்கள் இந்த புதையல் வேட்டை குறித்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், இந்த வெங்கடேஷ் தனது மனைவி கோவுலாவிடம் இது குறித்துக் கூறியுள்ளார். அதை வைத்தே இப்போது அவரை தெலுங்கானா போலீசார் கைது செய்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications