சிரித்தால் அழகாக தெரிய ஆப்ரேஷன் செய்த நபர் மரணம்! திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த சோகம்
ஹைதராபாத்: தெலுங்கனா தலைநகர் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது புன்னகையை அழகாக்க ஆப்ரேஷன் செய்த நிலையில், அந்த நபர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் எதாவது உயிருக்கு ஆபத்து என்றால் மட்டும் தான் ஆப்ரேஷன் செய்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை. நிலைமை மாறிவிட்டது. அழகிற்காக ஆப்ரேஷன் செய்யும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதற்காகவே தனியாகப் பல மருத்துவமனைகளும் உள்ளன.

அங்கே சென்றால் நமது விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி என்பது நமது உடல் உறுப்புகளின் அமைப்பை மாற்றச் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையாகும். அதுபோலவே இப்போது பற்கள் அழகாக இருக்க.. சிரித்தால் அழகாக இருக்க எனப் பல ஆப்ரேஷன்கள் வந்துவிட்டன.
ஆப்ரேஷன்: இவை செலவு சற்று அதிகம் என்றாலும் கூட நமது விருப்பத்திற்கு ஏற்ப நமது உடலை மாற்ற முடிவதால் இப்போது பலரும் இந்த ஆப்ரேஷன்களை செய்ய விரும்புகின்றனர். ஆனால், சில நேரங்களில் இதுபோன்ற ஆப்ரேஷன் செய்யும் போது உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுவிடுகின்றன.
இதற்கிடையே அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அங்கே இளைஞர் ஒருவர் திருமணத்திற்கு முன்னதாக தனது புன்னகையை அழகாக்க அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இருப்பினும், அதில் ஏதோ பிரச்சினை ஏற்படவே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அந்த நபர் அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
யார் அவர்: உயிரிழந்த அந்த நபர் 28 வயதான லக்ஷ்மி நாராயண என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இவர் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள பிரபல சர்வதேச பல் மருத்துவமனையில் 'ஸ்மைல் டிசைனிங்' ஆப்ரேஷன் செய்துள்ளார். இப்போது தான் இவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
பொதுவாக ஆப்ரேஷன் சமயத்தில் அனஸ்தீஸ்யா எனப்படும் மயக்க மருந்தைக் கொடுப்பார்களே. இந்த மயக்க மருந்தைத் தவறுதலாக மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாகக் கொடுத்துள்ளனர் என்றும் இதுவே அவர் உயிரிழக்கக் காரணம் என்றும் உயிரிழந்த லக்ஷ்மி நாராயணின் தந்தை குற்றஞ்சாட்டுகிறார்.
தந்தை கதறல்: அறுவை சிகிச்சையின் போது லக்ஷ்மி நாராயணுக்கு ஏதோ நடந்துள்ளதை மருத்துவமனை ஊழியர்கள் உணர்ந்த பிறகே தனக்கு போன் போட்டு அழைத்ததாக அவரது தந்தை கூறுகின்றார். உடனடியாக அருகே இருக்கும் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் இருப்பினும் அங்கே நாராயணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
என்னாச்சு: சிரிப்பை அதிகப்படுத்த எல்லாம் ஆப்ரேஷன் செய்கிறேன் என்று சொன்னால் வீட்டில் திட்டுவார்கள் என்பதால் லக்ஷ்மி நாராயண் தனது வீட்டில் இது தொடர்பாக எதுவும் கூறவில்லையாம். இதனால் மருத்துவமனையில் இருந்து கால் வந்த போது தனக்கு ஒன்னுமே புரியவில்லை என்றார் லக்ஷ்மி நாராயணின் தந்தை.. மேலும், தனது மகனுக்கு வேறு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையே அவர் உயிரிழக்கக் காரணம் என்றும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் போலீசாரில் புகார் அளித்துள்ளனர். அலட்சியமாக இருந்ததாக அந்த கிளினிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மருத்துவமனை பதிவுகள் மற்றும் பாதுகாப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications