ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம்
ஹைதராபாத்: அண்மையில் ஜனநாயகன் திரைப்படம் மொத்தமாக இணையதளங்களில் வெளியான விவகாரம் தொடர்பாக எடிட்டர்கள் சங்கம் ஒரு தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் எடிட்டர் தரப்பில் தவறு ஏதும் இல்லை என்றும், ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்த பணிகளின் போதுதான் இந்தக் கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் எடிட்டர் சங்கம் சந்தேகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி முழு விளக்கத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோ அளித்தால் தான் நிலைமை தெரியவரும்.
ஜனநாயகன் இந்தத் திரைப்படத்தின் கசிவுக்கும், அந்த படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் அவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சென்சார் பணிகள் தாமதமானதால், அந்த இடைவெளியைப் பயன்படுத்தி படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்த இயக்குநர் எச். வினோத் திட்டமிட்டிருந்தார்.

இந்த மேம்பாட்டுப் பணிகளுக்காக, கடந்த ஜனவரி 14-ஆம் தேதி படத்தின் ஒரு அதிகாரப்பூர்வ காப்பி ஒன்று, சிஜி வேலைகள் மற்றும் சவுண்ட் மிக்ஸிங்கிற்காக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவருமே முறையாக ஒப்புதல் அளித்திருந்தார்கள்.
எனவே ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் போது பல தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். எனவே, அந்த ஸ்டுடியோவில் இருந்துதான் படம் கசிந்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று எடிட்டர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக எடிட்டர்ஸ் யூனியன் தலைவர் கோபி இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ஜனநாயகன் வெளியே காசிந்ததில் மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரிலீஸ் தேதியானது ஜனவரி 9 என இருந்திருக்கக் கூடிய அந்த வேலையில் படம் தள்ளிப்போனது அப்போது படத்தின் இயக்குநர் எச் வினோத் படத்தில் ஒரு சில காட்சிகளை மெருகேற்றுவதற்காகவும், 5 மொழிக்கான ஒலிக்கலவைக்காகவும் படம் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பபட்ட்து. எங்கள் தரப்பில் படம் கசிய விடப்படவில்லை.படத்தின் எடிட்டர் மீது சந்தேகம் கொள்வது வருத்தமளிக்கிறது. உண்மை தெரியும் வரை யாரையும் பழி சொல்லாதீர். காவல்துறை விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் யார் என்பது அடையாளப்படுத்தப்படுவார்கள்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக நேற்று தமிழக காவல்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் 'ஜனநாயகன்' படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 300 விதிமீறல் இணைப்புகளுக்கான தடுப்பு கோரிக்கைகள் அனுப்பபட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனநாயகன் அல்லது பிற பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களின் திருட்டு பிரதிகளைப் பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒரு கைது செய்யப்படக்கூடிய குற்றமாகும், மேலும் தகுந்த சட்டங்களின் கீழ் தண்டனைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சமூக ஊடகங்கள், செய்தியிடல் தளங்கள் அல்லது வலைத்தளங்கள் மூலம் திருட்டு உள்ளடக்கத்தை தெரிந்தே பரப்பும் அல்லது ஊக்குவிக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications